Skip to main content

உங்கள் ஃபிட்னஸை கண்காணிக்க இந்தியாவுக்கு வருகிறது ஃஸியோமி ஸ்மார்ட் பேண்ட் 3

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

ஃஸியோமி (xiaomi, MI) நிறுவனம் செப்டம்பர்  மாதம் 27 – ஆம் தேதி பெங்களுருவில்  நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தனது நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. பேண்ட் 3, ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல தனது புதிய தயாரிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. 
 

mi

 


ஃபிட்னஸ் பேண்ட் 3 இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் ஃபிட்னஸ் பேண்ட்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃஸியோமி. குறைந்த காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமானது. மேலும், இந்தியாவில் அதிக அளவு  பயன்படுத்தப்படும் பேண்ட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய பேண்ட் 3–ல் இதயத் துடிப்பை அளவிடும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.  பேண்ட் 2–ல் இருந்ததை விட கூடுதல் அம்சங்கள் கொண்டும், கொள்ளளவு 0.78 அங்குலம் கொண்ட  திரையுடனும்   பேண்ட் 3 வெளிவர உள்ளது. 

வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்லீப்பிங் தொடர்பான தகவல்களை துல்லியமாக கணித்து, பயனாளர்களுக்கு மொபைல் மூலம் தரும். நமக்கு வரும் தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை, இந்த பேண்ட் மூலம் தவிர்க்கலாம். பேஸ்புக் அறிவிப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ், வெதர் இன்பர்மேஷன்,  வாட்ஸ்அப் மெசேஜ் ஆகியவற்றை நாம் இந்த பேண்ட்ன் திரை வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும்   பேண்ட் 3, வாட்டர் ப்ரூப் திறன் கொண்டது. 50 மீட்டர் ஆழம் வரை நீந்திக்  கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

ப்ளூடூத் 4.2 வசதி மற்றும் 10 செ.மீ. தூரத்தில் உள்ள கருவியுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறும் வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன்  பேண்ட் 3 வெளிவர உள்ளது. ஒரு முறை ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டு, பின்பு மொபைல் சாதனத்துடன் இணைக்கப்படவில்லை என்றால்கூட அது கண்காணிக்கப்படும் அளவுக்கு பேண்ட் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.3490 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஃஸியோமி ஸ்மார்ட் கேமராவும்  விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தயாரிப்பு சீனாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் கேமரா 360 டிகிரி சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த முகப்பு ஸ்மார்ட் கேமரா மிகவும் மலிவான விலையில், ரூ.2999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஹோம் ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரா இரவு நேரங்களில் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் அம்சத்தையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. 
 

 

mi


ஃஸியோமி நிறுவனம் இதற்கு முன்னதாகவே டிவி 4 சீரிஸ் கொண்டு ஸ்மார்ட் டிவிக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.  இந்த நிலையில் டிவி 4சி,  டிவி 4எஸ், டிவி 4எக்ஸ் என்ற மூன்று விதமாக ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளது ஃஸியோமி. இந்த டிவிக்களின் அளவு 32 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை இருக்கும். மேலும், வாய்ஸ் ரிமோட் அம்சமும் கொண்டு, ஸ்மார்ட் டிவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிவிக்களின் விலை ரூ.11,000 முதல் ரூ.29,999 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் ஏர் ப்யூரி ஃபையர் 2-எஸ் என்ற புதிய ஸ்மார்ட் ப்யூரி ஃபையர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை ஃஸியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. ஃஸியோமி நிறுவனம் இதற்கு முன்னதாகவே ஏர் ப்யூரிஃபையரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. 

 

mi

 

பெங்களுருவில் ஃஸியோமி நிறுவனம் நடத்தும்  நிகழ்ச்சியில்  ஸ்மார்ட் ட்ராவலிங்  சூட்கேஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஃஸியோமி 90 பாயிண்ட் சூட்கேஸ்  1 ஏ என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது. இது ஜெர்மனியின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய  பொருள்  கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே நான்கு சக்கரங்கள், நான்கு திசைகளிலும் சுழலும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை சூட்கேஸ் வெளிவர உள்ளது. சிறியதின் விலை 3200 ரூபாயாகவும், பெரியதின் விலை  4500 ரூபாயாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் 27 – ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஃஸியோமி நிறுவனம் இன்னும் பல தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.