Skip to main content

"ஆர்யாவுக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல... அபர்ணதி பாவம்" - எ.வீ.மா குறித்து பொங்கிய சென்னை கேர்ள்!     

Published on 15/04/2018 | Edited on 15/04/2018

மன்னராட்சி காலத்தில் செல்வ வளமுள்ள நாட்டின் இளவரசிக்குத் திருமணம் செய்ய பல நாட்டின் இளவரசர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதற்காக சுயம்வரங்கள் நடத்தப்பட்டன. இளவரசர்கள் அவரவர் திறமைகளை வெளிக்காட்டி, இளவரசியைக் கவரும் இளவரசனுக்கு மாலையிட்டு அவனை திருமணம் செய்துகொள்வாள். திருமண விஷயத்தில் அப்பொழுதிருந்து இப்போது வரை பெண்களுக்கு டிமாண்ட்தான். காதலும் செய்யாமல் திருமணத்திற்கு பெண்ணும் அவ்வளவு சீக்கிரம் அமையாமல் இருக்கும் சில முரட்டு சிங்கிள்களுக்கு இந்த வலி தெரியும். நிலைமை இப்படியிருக்க கலர்ஸ் டிவி நடத்தி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடுகிறார்கள். 16 பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் படிப்படியாக போட்டியாளர்கள் முன்னேறி இப்பொழுது 3 பேர் போட்டியின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்கள். 

 

arya with agaathaa



ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் அத்தனை பெண்களும் நெருக்கமாக இருக்கிறார்கள், தனிப்பட்ட விஷயங்களை பகிர்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரையில் இது தொடர்பாக ஒரு வழக்கும் கூட பதிவு செய்யப்பட்டது. கலாச்சார கோணத்தை புறம் தள்ளுவோம். சமூக கோணத்தில் பெண்கள் சுயமரியாதையுடன் முன்னேறி வரும் இந்தக் காலத்தில் ஒரு ஆணுக்காக இத்தனை பெண்கள் போட்டி போட்டு, சண்டை போட்டு, அழுது முயன்றது சரியா என்ற கேள்வி எழுந்தது. நிகழ்ச்சி முடிவில் ஆர்யா இவர்களில் ஒருவரை திருமணம் செய்வார் என்பது உறுதியும் இல்லை. இந்த இரண்டு கோணத்தையும் தவிர்த்த இன்னொன்றாக காதல் கோணமும் இதில் உண்டு. திரைப்படங்களும் கவிதைகளும் கதைகளும் தமிழ்நாட்டில் உருவாக்கிய காதல் பற்றிய கட்டமைப்பை மொத்தமாக உடைத்தது இந்த நிகழ்ச்சி. இத்தனை போட்டியாளர்களுடனும் அத்தனை நெருக்கமாக இருந்தார் ஆர்யா. 'சிங்கிள்ஸ் சாபம் உன்னை சும்மா விடாதுடா' என்கிற அளவுக்கு ஆண்களை வெறுப்பேற்றினார் ஆர்யா. இப்படி ஆண்களுக்கும் பொது சமூகத்துக்கும் பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சி குறித்து உண்மையில் இளம் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்றும்  கேட்டோம்.     

 

girls on evm



இந்த கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்குமிடமாக நாங்கள் முடிவு செய்தது ஐ.டி துறைதான். மாடர்னான நம்மூர் பெண்களை சந்திக்க சோழிங்கநல்லூர் சென்றோம். ரயிலுக்காக சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்திக் கேட்க, முதலில் மைக்கை பார்த்ததும் ஓடியவர் இந்த நிகழ்ச்சி குறித்து என்றதும் நின்றார். "இந்த நிகழ்ச்சியையெல்லாம் ஆரம்பத்திலேயே  தடை செய்திருக்க  வேண்டும். ஆர்யாவிற்காக இந்த நிகழ்ச்சியை முதலில் பார்த்தேன். போகப்  போக இதன் போக்கு சரியில்லை. அதனால் நான் பார்ப்பதில்லை.  நமக்கென்று தனிப்பட்ட விஷயங்கள் உள்ளன. அதை ஒரு நிகழ்ச்சியில் மக்கள் முன் சொல்வது தப்பு. எனக்கு ஆந்த ஆசையில்லை. அதில் கலந்துகொள்ள துளிகூட விருப்பமில்லை" என்றார். 

அடுத்து சோழிங்கநல்லூர் டி.சி.எஸ் (TCS) லிருந்து வெளியே வந்தவரை நிறுத்தினோம். "ஒரு நடிகரா இருந்தாலும் நியாயம் வேணாமா? அவருக்காக இத்தனை பேரும் எல்லா விஷயத்தையும் சொல்றாங்க. அவங்க பேரண்ட்சும் இப்படி வர்றாங்க, போறாங்க. அதுவும் அபர்ணதி வீட்டிலலாம் உண்மையான மாப்பிள்ளை மாதிரி பேசுனாங்க. இப்போ ஒண்ணுமில்லாம போச்சு. இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் இன்னொரு வாழ்க்கை உள்ளத்தைப்  பற்றி இவர்களுக்கு கவலையில்லை போல" என்றவரை வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்று கேட்டேன். அடித்துவிடுவது போல முறைத்தவர், "இவ்வளவு சொல்ற நான் எப்படிங்க கலந்துகொள்வேன்?" என்று கேட்டு நகர்ந்தார்.

 

abarnathi crying



இவ்வளவு எதிர்ப்பா என்று நினைத்தபடி அடுத்தவரிடம் பேசினோம். "நிகழ்ச்சி நல்லாத்தான் போகுது. இருந்தாலும் ஆர்யாவிற்காக அனைத்து பெண்களும் சண்டையெல்லாம் போட்டது கொஞ்சம் அதிகம்தான். எனக்கும் போட்டியாளராக இருக்க ஆசைதான், ஆனால் வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பெண்களையும் இதைப் பார்க்கும் பார்வையாளர்களையும் சிலர்  திட்டுறாங்க. அந்த பெண்களுக்கு பிடித்ததால் அவர்கள் வந்துள்ளார்கள். இதிலென்ன தப்பு?" என்று நம்மை கேட்டார். 

அடுத்து நாம் பேசியவர் ஒரு இன்ஃபோசியன் (அதாங்க இன்ஃபோசிஸ் நிறுனத்தில் வேலை பார்ப்பவர்). "ஆர்யாவுக்கு அவ்வளவு சீன்லாம் இல்லைங்க. இந்தப் பொண்ணுக எல்லாம் பாப்புலாரிட்டிக்காகவும் பணத்துக்காகவும் பண்ணுறாங்க. அவரு இன்னொரு படத்துல நடிக்கிற மாதிரி இதுலயும் நடிக்கிறாரு. அது மாதிரி நாமளும் ரொமான்டிக்கா அழகா விதம் விதமான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் பாத்து என்ஜாய் பண்ணிட்டு போக வேண்டியதுதான். இதை இவ்வளவு எல்லாம் டிஸ்கஸ் பண்ண கூடாது" என்றார்.

ஆம், உண்மையில் பார்வையாளர்களின் தேர்வுதான். ஒரு நிகழ்ச்சியை பொழுதுபோக்காக பார்த்துவிட்டு போவதும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும். அதே நேரம் குழந்தைகளின் மனதை வடிவமைப்பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்கு மிகப்பெரியது, அதுவும் இந்தக் காலத்தில். வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடர்களும் 'அடல்ட்ஸ்'கானது என்று பிரிக்கப்படுகின்றன. இங்கு அந்த பொறுப்புணர்ச்சியெல்லாம் இல்லாத நிலையில் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.                 

Next Story

ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில் ஆர்யா

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
arya attend studio opening ceremony

ஓ.எம்.ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும் சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  'சீயான்' விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம் கூட்டணி

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
arya santhanam new movie update

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குபட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2ஆம் தேதி  வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஆர்யாவும் கலந்து கொண்டார். 

அப்போது ஆர்யா பேசுகையில், “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.