Skip to main content

"இங்குதான் என் குழந்தைகள் பிறந்தன... இதை வைத்து நான் வியாபாரம் செய்ய மாட்டேன்" - நெகிழ வைத்த மருத்துவர் 

Published on 28/06/2018 | Edited on 12/09/2020


 

rajesh jegannathan

டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன்

 

"உடனே இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்கும் ஐடியா இல்ல சார். மதுரை, திருச்சி என்று கிளைகளைத் தொடங்கிவிட்டு அங்கு அனுபவமில்லாத மருத்துவர்களை வைத்துக்கொண்டு மாதமொருமுறை சென்று அவசரமாக  பார்த்து, இப்படி இதை கமர்சியல் ஆக்க விரும்பல சார்..." - இந்த பதிலை ஒரு தனியார் மருத்துவமனையின் இயக்குனரிடமிருந்து கேட்ட போது ஆச்சரியமாக இருந்தது. காரணம் இருக்கிறது...

 

இப்பொழுதெல்லாம் எஃப்.எம் ரேடியோக்களைப் போட்டுக் கேட்டால், துணிக்கடைகள், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் விளம்பரங்களோடு போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன கருத்தரிப்பு மருத்துவமனைகளின் விளம்பரங்கள். திண்டுக்கல்லில் புகழ் பெற்ற பிரியாணிக்கடைகளின் கிளைகளை சென்னையில் திறப்பது போல ஊர்களில் புகழ் பெற்ற கருத்தரிப்பு மருத்துவமனைகளின் கிளைகளை சென்னையில் திறக்கிறார்கள். ஆடி மாதம் வந்தால் துணிக்கடைகள் போடும் தள்ளுபடிகள், கிராண்ட் சேல் ஆஃபர் போல மகளிர் தினம், அன்னையர் தினம் வந்தால் ஸ்பெஷல் ஆஃபர் போடுகிறார்கள் இந்த மருத்துவமனைகளில். சில விளம்பரங்கள் பேக்கேஜ் சலுகை, காம்போ ஆஃபர் என்றெல்லாம் கூறி நம்மை பயமுறுத்துகின்றன.

 

தமிழகத்தில், ஏன் முழு இந்தியாவிலும் குழந்தைப் பேறு என்ற ஒன்று உணர்வுகளோடு கலந்ததாக இருக்கிறது. தங்கள் குடும்ப கடந்த கால  பாரம்பரியத்தின் நீட்சியாகவும் எதிர்காலமாகவும் வாரிசுகள் பார்க்கப்படுகின்றன. முன்பெல்லாம் இதற்காக பெண்கள் பட்ட கொடுமை கொஞ்சநஞ்சமல்ல. திருமணமாகி ஓராண்டில் குழந்தை பெறாவிட்டால் கடுமையான சொல், ஏளனமான பார்வை, கணவன் அடுத்தொரு பெண்ணை மணத்தல் என அவர்கள் சந்தித்த அநீதிகள் அதிகம். அறிவியல் வளர்ச்சியும் மக்களின் கல்வியும் இந்த நிலையை ஓரளவு மாற்றி, குழந்தைப் பேறின்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்தான் என்று மக்களை உணர வைத்திருக்கின்றன. இப்பொழுது மாறிவிட்ட வாழ்க்கை முறையும் உணவு முறையும் பெண்களுக்கிணையாக ஆண்களும் இதற்கு காரணமாக இருக்கும் நிலையை உருவாக்கியிருக்கின்றன. மக்களின் உணர்வில் கலந்த விஷயங்களை வணிகமாக்குவது இன்று நேற்று நடப்பதல்ல. ஆன்மிகம் தொடங்கி அக்ஷய திரிதியை வரை பல விஷயங்களிலும் இதை காண்கிறோம். அதில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது கருத்தரிப்பு சிகிச்சை.

 

 

dr.rajini rajendran

ரஜினி ராஜேந்திரன்



விளம்பரங்களும், விலையும் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால் மறுபக்கம் அவற்றை நம்பி சிகிச்சைக்கு செல்வோரை, முழுமையாக நம்பிக்கை கொடுத்து, வலியையும், செலவையும் கொடுத்து பின்னர், 'இந்த முறை IVF ஃபெயிலியர் ஆகிடுச்சு. அடுத்த முறை ட்ரை பண்ணலாம்' என சாதாரணமாக சொல்லி ஏமாற்றும் வேலைகளும் ஆங்காங்கே நடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று (27-06-18) சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் பில்ரோத் மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு பேசினார்.

 

மேலும் அவர், "2015ஆம் ஆண்டு, எனக்கு எங்கள் மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நடந்துகொண்டதால் இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண். அவர்கள் பிறந்தது எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து. அந்த வேதனையை நான் நன்கு அறிவேன். எனக்குக் கிடைத்த இந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கவேண்டும், அதுவும் தேவையில்லாத மனஉளைச்சல், உடல்வலி, செலவு இல்லாமல் கிடைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் கருத்தரிப்புக்கென 'அதித்ரி' என்ற என் மகளின் பெயரில் இந்த தனி பிரிவைத் தொடங்கியுள்ளோம். ஒரு மருத்துவமனையின் இயக்குனர் என்பதால் எனக்கு மட்டும் கிடைத்து நின்று விடக் கூடாது. எந்த பணியில் இருப்பவரும் பெறக் கூடிய வகையில் இதை உருவாக்குகிறோம். எங்கள் மருத்துவமனையின் இந்தப் பிரிவு என் உணர்வோடு கலந்தது. ஏற்கனவே 18 ஆண்டுகள் கருத்தரிப்பு சிகிச்சையில் சிறந்து விளங்கினாலும், இப்பொழுது IUI, IVF போன்ற சிகிச்சை முறைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி கருவிகள், வசதிகளோடு தனி பிரிவை உருவாக்கியுள்ளோம்" என்றார். அவரிடம் ஒருவர், "இது போல பிற ஊர்களில் தொடங்குவீர்களா?" என்று கேட்டார். வேறு எந்த தனியார் மருத்துவமனை நிறுவனர் என்றாலும் உறுதியாக "ஆம், விரைவில்" என்றே சொல்லியிருப்பார்கள். இவரது வித்தியாசமான பதிலே இவர் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.



 

adhithri



அந்த விழாவில் பேசிய மூத்த கருத்தரிப்பு மருத்துவரான ரஜினி ராஜேந்திரன், "குழந்தையில்லாதவர்கள், முதலில் நோயாளிகளே அல்ல. அவர்களுக்கு சிகிச்சை என்பதைவிட சரியான வழிகாட்டுதலே தேவை. அதனால் நாங்கள் எடுத்தவுடனே பெரிய சிகிச்சை செய்து உடனே வெற்றி பெறலாம், குழந்தை பெற்றுவிடலாம் என்றெல்லாம் கூறி ஆசையை உண்டாக்கமாட்டோம். அதே நேரம், இது கடினமானது, உங்கள் உடல்நிலை மோசம் என்று கூறி பதற்றப்படுத்த மாட்டோம். ஒவ்வொருவரின் உடலும் தனி. அதற்கேற்ப அறிவுரை கூறி வழிநடத்துவோம். உடலைத் தாண்டி இது மனம் சார்ந்தது. அதுமட்டுமல்லாமல் முன்பெல்லாம் பெண்களிடம் உடல்குறைகள் இருந்தன. இப்பொழுதெல்லாம் ஆண்கள்தான் அதிகமாக  குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கின்றனர். கடந்த காலங்களை விட இந்த குறைபாடு ஆண்கள் மத்தியில் இருபது சதவிகிதம் அதிகமாகியுள்ளது. வரும் காலங்களில் இன்னும் இருபது சதவிகிதம் அதிகமாகுமென கணிக்கப்படுகிறது. முக்கியமாக நகரங்களில் கார்ப்ரேட் வாழ்க்கை வாழும் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என அக்கறையும் எச்சரிக்கையும் சேர்த்து பேசினார்.

 

 

சென்னை ஷெனாய் நகர் பில்ரோத் மருத்துவமனை தன்னுடைய கருத்தரிப்பு பிரிவான 'அதித்ரி' குறித்து அறிமுகம் செய்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் அவர்கள் வழிகாட்டுதலில் குழந்தை பெற்ற தம்பதிகள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் பெரும்பாலும் கூறியது, "சிகிச்சைக்கு வந்தவுடன் முதலில் இருந்துதான் தொடங்குவோம் என செலவிழுத்துவிடாமல், ஏற்கனவே வேறு மருத்துவமனைகளில் பார்த்ததையெல்லாம் கருத்தில் கொண்டு எந்த நிலையில் இருக்கிறோமோ அதற்கேற்ப வழிகாட்டுகிறார்கள்" என்பதே. பெருகி வரும் குழந்தையின்மைக்கு மக்களை பயமுறுத்தாமல் சரியான வழிகாட்டுதல் தருவார்கள் என நம்பிக்கையை அளித்தது அவர்கள் பேச்சு.                               

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.