Skip to main content

நீல நிறமாக மாறிய நினைவுச் சின்னங்கள் - காரணம் இதுதான்!   

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

கடந்த திங்களன்று (ஏப்ரல் 2) மாலை டெல்லி குதுப் மினாரைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. முழுவதும் நீலமாக மாறி ஜொலித்தது. எதற்காக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று விசாரிக்க, ஏப்ரல் 2 சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் என்றும் மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய தகவல்களைப் பரப்ப ஒரு குறியீடாக நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும்  16,000க்கும் அதிகமான முக்கிய கட்டிடங்கள் நீல ஒளி ஏந்தி நின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தொடங்கி, எம்பயர் ஸ்டேட் கட்டிடம் - நியூயார்க், நயாகரா அருவி - கனடா, கிறிஸ்டோ ரெடென்டர் - பிரேசில், நெல்சன் மண்டேலா பாலம் - சவுத் ஆப்ரிக்கா, பிரமிட் - எகிப்த், பழைய பாராளுமன்ற கட்டிடம் - ஆஸ்திரேலியா போன்றவை அவற்றில் முக்கியமானவை. இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் ஆட்டிசம் என்றால் என்ன? அது வெளிநாடுகளில் நகரங்களில் மட்டுமே இருப்பதா?  
 

Qutb minar blue light



இயற்கை, நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனாலும் வாழ்வு அனைவருக்கும் ஒன்றாக இல்லை. சிலர் தத்தளித்து எதிர்நீச்சலிட்டே வாழவேண்டியிருக்கிறது. அதிலும் சில சமயங்களில், இறக்கைகளை பிடுங்கிக் கொண்டு "பறந்து செல் பார்க்கலாம்" என்று கூறுவது போல பிறப்பிலேயே உடல் கூறுகள் சில மனித மனங்களை  பதம் பார்த்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் ''ஆட்டிசம்''. இது நோய் அல்ல, இது ஒரு குறைபாடு. ஆனால் இது வருவதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. இதற்கான முழு மருத்துவ முறை, மருந்து, மாத்திரை என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் முறையான சில பயிற்சிகள் மூலம் மேம்படுத்தலாம். அமெரிக்காவில் 150க்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் சரியான எண்ணிக்கை நம் அரசிடமில்லை.

 

white house america

வெள்ளை மாளிகை

Pyramid in blue

பிரமிட்

'தன் முனைப்பு குறைபாடு' எனப்படும் ஆட்டிசம் பாதிப்பு நிறைந்த குழந்தைகள் எப்பொழுதும் சிறப்பு கவனத்தில் இருக்க வேண்டியவர்கள். இவர்களால் தங்களுடைய வேலைகளை தானே செய்து கொள்ள முடியாது. எப்போதும் தனிமையில் இருப்பார்கள், பேச்சில் வார்த்தைகள் முறையாக, சீராக இருக்காது, தனக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறமாட்டார்கள். கண்களை உற்று நோக்கிப் பேசமாட்டர்கள், அவர்களுக்கென தனி உலகம், அதில் தனிமையில் வாழும் சிறப்பு உயிர்கள் அவர்கள். ஆனால் இந்த குறைபாட்டை மனநோய் என்று பார்க்கும் போக்கே இந்தியாவில் இருக்கிறது. மற்றவர்களால் மட்டுமல்ல ஆட்டிசம் பாதிப்புள்ள   குழந்தைகளின் பெற்றோர்களே இப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் இது மனநோய் அல்ல. அதே போல் இது முற்றிலும் குணமடையும் குறைபாடும் அல்ல என்பதுதான் மனதை சமாதானப் படுத்தமுடியாத ஒரு பதில்.
 

Autism kid

 

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கென சில பயிற்சிகள் முழு தீர்வை தராவிட்டாலும் சில முன்னேற்றங்களை கண்டிப்பாக கொண்டுவரும். அவற்றில் நடத்தை சீராக்கல் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சி, பேச்சுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் முறையாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களின் வாழ்விலும் நடைமுறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படும். 

 

autism kid


அன்றாட வாழ்வின் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருவதே அவர்களுக்கான முதல் பயிற்சியாக இருக்கும். இந்த ஆட்டிசம் பாதிப்பு எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையோடு மற்றொரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒப்பிட முடியாது. எல்லோரும் தனித்தனி உலகத்தில் இருப்பவர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஒரு சில திறமைகள் இருக்கும். அதை கண்டுபிடிப்பது அவர்களை உற்றுநோக்கி வளர்க்கும் பெற்றோரால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும். சில குழந்தைகள் கணிதத்தில், இசையில், பஸ்சில்ஸ் போன்ற ஏதேனும் ஒரு திறமையை கொண்டிருப்பார்கள்.  அதுவும் அந்தத் திறமை அதீத திறமையாகவே இருக்கும் அதை கண்டுபிடித்து வெளிக்கொணர்வது பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. இந்த சமூகமும் கூட ஒரு பெரும் மனவியல் குறைபாட்டை கையாளத் தெரியாமல், 'இவையெல்லாம் முன்வினை பயன், அது இது' என்று பேசுகிறது. இதை புரிந்து கொண்ட சில நாடுகளும் மக்களும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சிறப்புக் குழந்தைகள் என்ற பார்வையில் அவர்களுக்கென ஒரு அங்கீகாரத்தை, ஒரு ஒத்துழைப்பைக் கொடுத்துவருகிறது. நாமும் அதற்கு தயாராவோம். 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.