Skip to main content

நன்றாகப் பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா?

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் பலருக்கு இருக்கக் கூடிய தீய எண்ணங்களில் ஒன்று அடுத்தவர்க்கு எதாவது கெடுதல் நடந்தால் அதைப் பார்த்து மிகவும் சந்தோசம் அடைவார்கள்.‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது பொது மொழி. இதனை சாதாரணமாக நினைத்தால் அது தவறு.‘போங்கடா வேலையில்லை இவங்களுக்கு’ என்று இதனைக் கேவலமாக நினைப்பவர்களும் உண்டு. ஆனால் இது சத்திய வாக்கு என்பதை அனுபவம்தான் அவர்களுக்கு உணர்த்தும்.

ஒரு ஊரில் சாமியார் ஒருவர் வசித்து வந்தார். அவர் எப்போதும் தியானம் செய்து கொண்டே இருந்தார். அங்குள்ள வீடுகளில் பிச்சை எடுத்து ஒருவேளை மட்டும் உணவருந்தி வந்தார்.ஒருநாள் பிச்சைக் கேட்டு மூதாட்டி ஒருவர் வீட்டின் முன் நின்றிருந்தபோது அந்த மூதாட்டியின் ஒரே மகன் நன்றாகக் குடித்து விட்டு அவளை அடித்தும் உதைத்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.இதைப் பார்த்த சாமியார், அவனைத் தடுத்து நிறுத்தி மூதாட்டியைக் காப்பாற்றினார். அத்துடன் கோபத்தில், ‘‘பெற்ற தாயையே உதைத்த நீ நாசமாகப் போவாய்’’ என்று சாபம் வேறு கொடுத்தார்.தன்னை மகன் அடித்துத் துன்புறுத்தியதைக்கூடப் பெரிதாக நினைக்காத அந்த மூதாட்டி, மகனை சாமியார் சபித்ததால் கடும் கோபம் அடைந்தாள்.அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. சாமியாரின் சாபம் பலித்து தனது மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கலவரம் அடைந்தாள்.

help image

தான் பாசத்தோடு வளர்த்த தன் ஒரே செல்ல மகனை இப்படி சபித்து விட்டாரே என்று நினைத்தாள். காலையில் எழுந்தபோது கவலையும், சோகமும் மறைந்து சாமியார் மீது இப்போது ஆத்திரம் ஏற்பட்டது. ‘இந்த சாமியார் உயிரோடு இருந்தால்தானே இப்படி சாபம் விடுவார். அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டால் என் மகனுக்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றி விடலாம்’ என்ற எண்ணம் எழுந்தது.தனது குடிகார மகன் மீதான பாசம் காரணமாக அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்தியது.அன்று வழக்கம்போல பிச்சைக் கேட்டு வந்தார் சாமியார். அவர் மீது கடும் கோபத்தில் இருந்த மூதாட்டி, சோற்றில் விஷத்தைக் கலந்து அதனை சாமியாருக்குக் கொடுத்துவிட்டாள். சாமியாரும் அதை வாங்கிக் கொண்டு தனது இடத்திற்குச் சென்றார்.அப்போது நன்றாகக் குடித்துவிட்டு அங்கே வந்த மூதாட்டியின் மகன் சாமியாரிடம், ‘‘நன்றாகப் பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா?’’ என்று கேட்டான். 

இவரது அனுமதியைக்கூடப் பெறாமல் பாத்திரத்தில் இருந்த உணவை எடுத்து விழுங்கத் தொடங்கினான். கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் பாத்திரத்தில் இருந்த உணவு முழுவதையும் அவனே தின்று தீர்த்தான்.சற்று நேரத்தில் மயங்கிச் சாய்ந்தவன் பின்னர் இறந்து போய் விட்டான். பிறருக்குக் கேடு நினைத்தால் அது நிச்சயமாக நமக்கே வந்து சேரும். இதனைக் கதையாக மட்டும் நினைக்கக்கூடாது. உண்மை நிகழ்வுகளும் நிச்சயமாக இப்படித்தான் அமையும்.

Next Story

'இறந்தபிறகும் சேவை...'-10 ரூபாய் மருத்துவர் அசோகன் மறைவால் பரிதவிக்கும் கிராம மக்கள்!  

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Rs 10 of Dr. Asokan passedaway-Villagers mourn the death

 

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அசோகன். இவர் கடந்த  40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் நகரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.  இவரை பொதுமக்கள் 10 ரூபா டாக்டர் என்றே அழைப்பார்கள். கடந்த ஆண்டு கரோனா நேரத்தில் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையை மூடாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரின் சேவையை மதிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

 

இவர் தற்போது மருத்துவம் பார்த்து வரும் எஸ்.பி கோயில் தெருவில் உள்ள இவரது மருத்துவமனைக்கு வெளி மாவட்டம்,  சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏழை மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு  தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தாலும் இதுவரை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் இல்லை. வாடகை இடத்திலேயே இவர் மருத்துவம் பார்த்து வந்தார்.

 

மருத்துவமனைக்கு திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தால் அவர்கள் பணம் இல்லை என்று கூறினாலும் கட்டாயபடுத்தமாட்டார். மிகவும் எளிய குணம் கொண்ட இவர் மருத்துவமனையின் ஓரத்தில் செல்லபிராணியாக உள்ள நாய்களை வளர்த்து வந்தார். சில நேரங்களில் மன அமைதிக்கு அதனுடன் நேரத்தை கழிப்பார். சிதம்பரம் பகுதியில் உள்ள ஏழை மக்கள் அதிகம் நாடி செல்லும் மருத்துவராக இவர் பணியாற்றி வந்து அனைவரின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

 

mm

 

இந்நிலையில் மருத்துவர் அசோகன் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இவரது இறுதி ஊர்வலம் எஸ்.பி.கோவில் தெருவில் உள்ள அவரது மருத்துவமனையிலிருந்து அவரது சொந்தஊரான தையாக்குப்பம் சுடுகாட்டில் வைக்கப்பட்டது. இறந்தபிறகு இவரின் கண்கள் புதுச்சேரி அரவிந் கண் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இருக்கும்போதும் இறந்தபிறகும் சேவை செய்த இந்த எளிய மருத்துவரின்  மறைவு அனைத்து தரப்பு மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவி குமாரி (66), இரு மகன்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர். 

 

 

 

Next Story

"ஒருவருஷம் தான் உங்க பொண்ணுக்கு டைம்னு சொல்லிட்டாங்க!" - பணம் இல்லாமல் துடிக்கும் தாய்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

sivagangai district college student need to help for the treatment

 

இன்னும் மூணு வருஷந்தா உங்க பொண்ணு உயிரோட இருப்பாங்க. புடிச்சத செஞ்சிபோடுங்க என டாக்டர் சொல்லி, ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் ஒருவருஷம்தான் என் பொண்ணு உயிரோட இருப்பாளாம். ட்ரீட்மெண்ட் பண்ணா காப்பாத்திடலாம்னு சொல்றாங்க. அவ்ளோ காசுக்கு நான் என்ன பண்றதுன்னு தெரியல. எதாச்சும் உங்களால பண்ணமுடியுமா எனக் கண்ணீர் ததும்பிய கண்களுடன் கையறு நிலையில் பேசத் தொடங்கினார் ஜெயபாரத தேவி.

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜெயபாரத தேவி. திருமணம் ஆகி சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கணவர், மூன்று குழந்தைகளுடன் ஜெயபாரத தேவியை கைகழுவிவிட்டார். இவர்களுக்கு 2 மகள், 1 மகன். வீட்டு வேலை செய்து, பத்து பாத்திரம் கழுவி, பிள்ளைகளை வளர்த்துவந்தார் ஜெயபாரத தேவி. பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கான தேவைகளும் வளர்ந்தது. அவர் ஒருவரின் சம்பாத்தியம் மட்டுமே நால்வரின் தேவைக்கு ஈடு கொடுக்கவில்லை. விளைவு, மகனின் படிப்பு தடைபட்டது. இருளில் தவிக்கும் குடும்பத்தைக் கரையேற்ற, பெயிண்டர் வேலைக்கு புறப்பட்டார் மகன். மூத்த மகள் சிவககங்கை அரசு பெண்கள் கல்லூரியில், முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இரண்டாவது மகள் மானாமதுரையில் உள்ள பள்ளியில், 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெரிய வசதி இல்லையென்றாலும், நிம்மதியான சூழலை நோக்கி வாழ்க்கை நகரத் தொடங்கியது.

 

பணம், காசு எல்லாம் வேண்டாம் ஆரோக்கியத்தோட இருந்துட்டா போதுமென நினைத்த ஜெயபாரத தேவியின் ஆசை, மிக விரைவிலேயே கருகிப் போனது. கல்லூரியில் படிக்கும் மூத்த மகளின் பெயர் லாவண்யா. கடந்த சில ஆண்டுகளாக, லாவண்யா வலிப்பு நோயால் அவதிப்பட்டுள்ளார். செருவாடு சேத்துவைத்திருந்த பணத்தையெல்லாம் பிரித்து, மகளுக்கு மருத்துவச் செலவு பார்த்துள்ளார் ஜெயபாரத தேவி. வலிப்பு நோயாக இருந்தவரை கூட அவர் பெரிதாக அச்சப்படவில்லை. இதன்பிறகு, லாவண்யாவின் பாதம், கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதனால், பதற்றமடைந்த லாவண்யாவின் அம்மா, மருத்துவமனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்துள்ளார். இதற்காக, லாவண்யா நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு குணமாகியிருக்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என நினைத்து நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள், அடுத்த பிரச்சனை அணிவகுத்து நின்றுள்ளது.

 

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகளால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் ஜெயபரத தேவி, சரிவர ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டால் மகளை காப்பாற்றிவிடலாம் எனக் கூறுகிறார். இல்லையென்றால், நீண்ட நாள் மகள் உயிரோடு இருக்கமாட்டார் எனக் கூறுகிறார். நம்மிடம் பேசும்போதே, லாவண்யா மயக்கம் போட்டு தரையில் அமர, அவரை பத்திரமாக கூட்டிச் சென்று படுக்கவைத்து போர்வை போர்த்திவிடுகிறார் தாயார் ஜெயபாரத தேவி. இதையெல்லாம், பார்த்துக்கொண்டு நிற்கும்போதே நமக்கும் கண்ணீர் முட்டியது. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் அம்மா.. கவலைப்படாதீங்க எனச் சொல்லும்போதே முட்டிநின்ற கண்ணீர், கொட்ட ஆரம்பித்துவிட்டது. தாளமுடியாத கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றோம்.

 

லாவண்யாவுக்கு அரசு தலையிட்டு உதவவேண்டும் என்பதை விட, அவரை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகவும் இருக்கிறது.