Skip to main content

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

Published on 31/10/2021 | Edited on 31/10/2021

 

1_3.jpg

 

அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் விளக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் விளக்கு இலக்கிய அமைப்பின் 25வது ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சுகிர்தராணிக்கும், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.

 

suki.jpg

சுகிர்தராணி

 

கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம் இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். வேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர், சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கிவருபவர். ‘இரவு மிருகம்’, ‘தீண்டப்படாத முத்தம்’, ‘இப்படிக்கு ஏவாள்’ உள்ளிட்ட ஆறு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தன் நினைவு விருது, இந்திய குடியரசு கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுவின் அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

stalin rajangam.jpg

ஸ்டாலின் ராஜாங்கம்

 

ஸ்டாலின் ராஜாங்கம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள முன்னூர் மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர் பணிபுரிகிறார். மிகப் புதிய ஆய்வுமுறைகள் மூலம் மாற்று வரலாற்றையும் மாற்றுப் பண்பாட்டையும் தலித்துகளுக்காக பெரும் ஆதாரங்களுடன் நிறுவியவர். பல ஆழமான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லும் இத்தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான ஸ்டாலின் ராஜாங்கம், ‘தீண்டப்படாத நூல்கள் :ஒளிபடா உலகம்’, ‘சாதியம்: கைகூடாத நீதி’, ‘அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்’, ‘தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான ஸ்பேரோ இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து இயங்கிவரும் இரு விருதாளர்களையும் நக்கீரன் வாழ்த்துகிறது.

 

 

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.