Skip to main content

புண்ணியம் தரும் மஹோதய தை அமாவாசை..!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

பித்ருக்கள் என்பவர்கள் நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். ஜாதகத்தின் 9-ஆம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானமே ஜாதகரின் முன்னோர்களைப் பற்றிக் கூறும் இடம். தன் குலத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு முறையான பித்ருசாந்தி வழிபாடு செய்யத் தவறியவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும். பித்ரு தோஷத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.

1. பித்ரு கோபம்.

2. பித்ரு சாபம்.

பித்ரு கோபம்

பித்ரு கோபம் என்பது, பித்ருக்களுக்கு தனது சந்ததியினர்மேல் உருவாகும் மன வருத்தம். முன்னோர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்காமல் நிராதரவாகவிட்டது, உடைமைகளைக் கைப்பற்றியது போன்ற மனம் வருந்தும் செயல்களைச் செய்த குற்றம் அல்லது மறைந்த பிறகு அவர்களுடைய ஆத்ம சாந்திக்கான வழிபாட்டுமுறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதால் ஏற்படும் மன வருத்தமே தோஷ மாகி ஜாதகத்தில் பிரதிபலிக்கும். இங்கே வாசகர்களுக்கு மனதில் ஒரு கேள்வி எழக்கூடும். இந்த பிறவியில் நான் செய்யும் தவறு எப்படி ஜாதகத்தில் தோஷமாகி நிற்கும்?

இந்த பிறவியில் ஒருவருக்கு ஒவ்வொரு நொடியிலும் நிகழப்போகும் நிகழ்வுகளின் நிகழ்வுச்சக்கரமே ஜாதகக்கட்டம் என்பதை எப்பொழும் மறக்கக் கூடாது. எந்த தோஷமும் ஜாதகரைவிட ஜாதகரின் வாரிசுகளின்மேலேயே கை வைக்கும் என்பதையும் மறக்கக்கூடாது. இதுதான் கர்மா அல்லது கர்மவினைப் பதிவு. அடுத்ததாக, இதை ஜாதகக் கட்டத்தில் எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்வி எழும்.

ஜாதகர், ஜாதகரின் முன்னோர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப் பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் ராகு, கேது நிற்கும்போது ஜனனம் நிகழ்கிறது.

ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பிதுர்தோஷம் இருப் பதை உறுதிசெய்யும் கிரக அமைப் பாகும். சூரியன், சந்திரன், ராகு- கேது வுடன் சம்பந்தம்பெறுவது, சூரியனும் சந்திரனும் ராகு- கேது சாரத்தில் நிற்பது, 9-ஆம் அதிபதி ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெறுவது, 9-ஆம் அதிபதி 8-ல் மறைவது, 8-ஆம் அதிபதியின் பார்வை பெறுவது, 8-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் அல்லது எட்டாம் அதிபதியின் சாரம்பெறுவது பித்ரு தோஷத்தை உறுதிசெய்கிறது. பித்ருக்களின் கோபத்தை எளிய அமாவாசை வழிபாடு, எள் தர்ப்பணத்தின்மூலம் சரிசெய்ய முடியும்.

பித்ரு சாபம்

பித்ரு சாபம் என்பது மறைந்த முன்னோர்கள் தன் தலைமுறையினருக்கு இடும் சாபம். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். முன்னோர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கும், ஒரு செயலைச் செய்வதாக சத்தியம் செய்துவிட்டு செய்யாமல் இருப்பவர்களுக்கும் பித்ருசாபம் ஏற்படும். உதராணமாக, ஒரு சொத்தைப் பிரிக்கும்போது அண்ணன் உயிருடன் இல்லாத காரணத்தால், தம்பி அண்ணனின் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கொடுக்காமல் தானே பயன்படுத்துவது அல்லது தனது குழந்தை களின் நலனுக்காகப் பயன்படுத்துவது போன்ற நம்பிக்கை துரோகம் மிகுந்த செயல் களால் ஏற்படும் சாபமாகும். ஒருவரை சொத்துக் காக, பணத்திற்காகக் கொலைசெய்வது அல்லது மனவேதனை அடைந்து இறக்கச் செய்வது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் ஏற்படும். இதை ஜோதிடரீதியாக ஜாதகத் தைக்கொண்டு அறியமுடியும். ஜனன ஜாதகத் தில் லக்னத்திற்கு 1, 5, 7, 9 முதலான இடங் களில் ராகு- கேது, மாந்தியுடன் இணைந்திருப்பது, சூரியன், சந்திரன், ராகு- கேதுவுடன் மாந்தி சம்பந்தம்பெறுவது, சூரியனும் சந்திரனும் ராகு- கேது சாரத்தில் நிற்பது, 9-ஆம் அதிபதி ராகு- கேது, மாந்தியுடன் சம்பந்தம் பெறுவது, 9-ஆம் அதிபதி 12-ல் மறைவது, 12-ஆம் அதிபதியின் பார்வை பெறுவது, 12-ஆம் பாவகத்தோடு சம்பந்தம் அல்லது 12-ஆம் அதிபதியின் சாரம்பெறுவது, கிரகண காலங்களில் குழந்தை பிறப் பது போன்றவை பித்ரு சாபத்தை உறுதி செய்கின்றன.

மேலேகூறிய அமைப்புகளுடன் சனி சம்பந்தம் பெறும்போது, தலை முறை தலைமுறையாகத் தொடரும் பித்ருசாபம் இருக்கும். இதை மிகச்சுருக்கமாகச் சொன்னால், ‘தர்மகர்மாதிபதி யோகத்தைத்’ தவறாகப் பயன்படுத்தியவர்கள்- அதாவது வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கு இந்த முன்னோர் சாபம் நிச்சயமாக இருக்கும்.

அதிகமான புண்ணிய பலத்தால் பித்ருதோஷத்தை ஒருவர் தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் போனால், அந்த பித்ருதோஷத்தை அவரது வம்சத்தினர் அனுபவிக்கநேரும். ஒருவர் தன் தலைமுறை யினருக்கு எந்த ஒரு சொத்தும், பணமும் சேர்த்து வைக்காவிட்டாலும், பித்ரு கர்மாக்கள் செய்யாததால் ஏற்படும் பித்ருதோஷத்தை சொத்தாக வைத்துவிட்டுச் செல்லக்கூடாது.

மேலும் சிரார்த்தம், தர்ப்பணம் போன்ற பித்ருகர்மாக்களை ஒரு குடும்பத்து வாரிசுகள் ஒன்றாகச் செய்யவேண்டுமா? அல்லது தனித்தனியாகச் செய்ய வேண்டுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. முடிந்தவரை கூட்டாகச் செய்யவேண்டும். இயலாத நிலையில் தனித்தனியாகச் செய்யவேண்டும். சகோதரர் செய்துவிட்டாரே- நாம் ஏன் தர்ப்பணம், வழிபாடு செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணி, அவற்றைச் செய்யாமல் இருந்தால், நஷ்டம் அவருக்குத்தானே தவிர பித்ருக்களுக்கு இல்லை.

பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தியின்மை போன்றவை ஏற்படும்.

முன்னோர்களுக்கு அமாவாசையன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி முதலான பலன்கள் கிடைக்கும்.

ஒரு குடும்பத்தில் துர்மரணம்மூலமாக இறப்பு நிகழ்வதற்கும் பித்ருக்கள் சாபமே காரணம். இதுபோல் துர்மரணம், பித்ருக்களின் சாபம் ஏற்படுவதற்கு என்னவகையான சாபம் காரணம் என்பதை பிரசன்னத்தின்மூலம் தெரிந்து, அதற்குரிய ஹோமங்கள், திலஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்த்தம் செய்தால், பித்ரு சாபத்திற்கு நல்லதீர்வு கிடைக்கும். ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் பித்ருதோஷம் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நட்சத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், சிரார்த்தம்செய்து, "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:'’ எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
 

thainewmoonday

ஆகவே பித்ரு கோபம், சாபத்தை அமாவாசை, பித்ருக்கள் பூஜை, தில தர்ப் பணம், திலஹோம வழிபாட்டின் மூலமாகவே சரிசெய்ய முடியும். இதில் அமாவாசை வழிபாடு எளிமையானது மற்றும் அளவு கடந்த நற்பல னைத் தருவது. ஏனென்றால் அமாவாசை நாளில் தான் மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்கார கனாகிய சூரியனும் ஒன்றாக இணைகிறார்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்கள். சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசை தினத்தில், மறைந்த முன்னோர்கள் தமது சந்ததியினர் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்திபெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள்புரிவார்கள். மறைந்த முன்னோர்களும், பெற்றோர்களும் இறைவனடி சேர்ந்திருந்தாலும், அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் தன் குடும்பத் தாரைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கும்.

அமாவாசையன்று சர்வகோடி லோகங் களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து, தனது வாரிசுகளின் வீட்டு வாசலிலும், புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோ ரங்களிலும் தங்குவார்கள். வீட்டுவாசலில் வந்துநிற்கும் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் மிகுதியாக இருக்கும். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாகத் தரவேண்டும். வலதுகை சுட்டு விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள்வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப் படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியைமீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல் களுக்கு தொலைவிலுள்ள பித்ரு லோகத்தை அடையும். அமாவாசையன்று கீழிருந்து மேல்செல்வதே பித்ருலோக அந்தர ஆகர்ஷண சக்தியின் தெய்வீகக் தன்மையாகும்.

தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமாகப் பெருகுகின்றது. பித்ருக் களுக்கு தர்ப்பணம் செய்யும்போது பசுந் தயிர்கொண்டு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

இவ்வளவு புண்ணியப் பலன் தரும் தை அமாவாசை, விளம்பி வருடம், தை 21-ல் திங்கட் கிழமை (4-2-2019) வருகிறது. அன்றுவரும் தை அமாவாசை மஹோதய புண்ணிய காலமாகும். மஹோதய புண்ணிய காலம் என்பது திதி - அமாவாசை, நட்சத்திரம்- திருவோணம், யோகம்- வியதீபாதம், மாதம்- தை, கிழமை- திங்கள் அர்தோதயத்தில் கிழமை- ஞாயிறு. அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வியதீபாத யோகத்தின் நான்காவது பாதமும், அமாவாசையின் முதல்பாகமும், திருவோண நட்சத்திரமும் ஒருசேரக் கிடைப்பது மிகவும் விசேஷமாகும். அன்று சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறுகளில் பித்ருக்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் தரவேண்டும்.

பித்ருக்களுக்கு பூஜைசெய்து, அந்தணர் களுக்கு தானம்தரும் பொருட்களில் பூசணிக் காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் இருக்கவேண்டும். அதற்குப் பிறகு வீட்டிலிருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து வணங்கி, அதை காக்கைக்கு வைத்தபிறகு சாப்பிட வேண்டும். அன்று ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைகள் தானம் வழங்கலாம். இந்த நாள் கோடி சூரிய கிரகணத்திற்குச் சமம். நீர்நிலைக்குச் சென்று பித்ரு தர்ப்பணம் செய்யமுடியாதவர்கள், பெண்கள் ஆகியோர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தந்து, வீட்டிலோ, சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்துவரும் நாள் அமாசோமவாரம் ஆகும். இந்த நாளில் அரசமரத்தை வழிபட்டு வலம்வருதல் சிறப்பாகும். இதை அஸ்வத்த பிரதட்சணம் என்பார்கள். அஸ்வத்தம் எனில் அரசமரம் என்று பொருள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். அரசமரத்தை வணங்கு பவர்களின் பாவம், நோய்கள் நீங்கும்.

அரசமரத்தை அதிகாலை வேளையில் வலம்வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். மேலும் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், காலை வேளையில் நீராடி அரசமரத்தை வலம்வந் தால் கருப்பைக் கோளாறுகள் நீங்கும். ஆண்கள் வலம் வந்தால் சுக்கில விருத்தி ஏற்பட்டு குழந் தைப்பேறு கிடைக்கும் மூன்றுமுறை வலம்வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்துமுறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பதுமுறை வலம்வந்தால் புத்திர பாக்கியமும், பதினோருமுறை வலம்வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றெட்டுமுறை வலம்வந்தால் அஸ்வமேத யாகம் நடத்தியப் பலனும் கிடைக்கும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமா வாசையும், அவருக்குரிய திங்கட்கிழ மையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரசமரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம்வரவேண்டும்.

'மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம.’


தை அமாவாசையும், திங்கட் கிழமையும் இணைந்துவரும் இந்த அற்புதநாளில், எளிய திதி, தர்ப்பணம்செய்து பித்ருதோஷம், சாபத்தால் உருவான தோஷத்தை- கர்மவினையைக் குறைத்தால் நலம்பெருகும்.

செல்: 98652 20406

 

Next Story

தை அமாவாசை; புதுச்சேரி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

tai month new moon day people gathered on puducherry beach

 

சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.

 

தை அமாவாசையான இன்று (21.01.2023) புதுச்சேரி கடற்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், மணக்குள விநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோயில், கௌசிக பாலசுப்பிரமணியர்,  தண்டு முத்துமாரியம்மன், வரதராஜபெருமாள்,  உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன.

 

அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாக  சுவாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இதே போல, தை அமாவாசையை முன்னிட்டு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் நடந்தது. இதில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

 

 

Next Story

தாமிரபரணியில் தர்ப்பணம் செய்வதற்குத் தடையில்லை... நீர் நிலைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

 

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில், நீர் நிலைகளில், மறைந்த முன்னோர்களுக்காக, அவர்களது உறவினர்கள் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவது இந்துமத நம்பிக்கை.

 

தென் மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையான ஏர்ல், முறப்பநாடு, பாபநாசம் போன்ற இடங்களில் மக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்காகக் கூடுவர். கடந்த 11 மாதங்களாக கரோனாவின் தாக்கம் காரணமாகக் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு தர்ப்பணம் செய்ய அரசு தடை விதித்திருந்தது.

 

இந்த நிலையில், கரோனா கட்டுக்குள் வந்ததால் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கிய அமாவாசை தினமான இன்றைய அமாவாசையின் போது முறப்பாடு, பாபநாசம், குற்றால அருவிக்கரை உள்ளிட்ட தாமிரபரணியாறு சிவனாலயப் பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்கள், உறவினர்களுக்குத் தர்ப்பணம் செய்து சிவாலய வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனால் முக்கியப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.