Skip to main content

கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பற்றிய திருஞானசம்மந்தர்... திருநீலகண்ட பதிகத்தின் மகிமை கூறும் நாஞ்சில் சம்பத்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், திருநீலகண்ட பதிகம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கரோனா என்ற கொள்ளை நோய் இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கொள்ளை நோயில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் நீத்துவிட்டனர். இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்ள முடியாமல் உலகம் தடுமாறுகிறது. சுரம் என்ற காய்ச்சல் வந்துவிட்டால் அந்தக் காய்ச்சலைக் கண்டு அச்சப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. காய்ச்சல், இருமல் வந்தால் மாத்திரை போட்டுக்கொண்டு வழக்கமாக இயங்குகிற நடைமுறைகள் எல்லாம் இன்றைக்கு ஒத்துவரவில்லை. இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்ள முடியாமல் வல்லரசுகளே திணறுகின்றன. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் இன்றைக்கும் திண்டாடத்தான் செய்கிறது. இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி தடுப்பூசிதான் என்று சொல்லி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. அதே நேரத்தில், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலையும் பார்க்க முடிகிறது. 

 

இந்தக் கொள்ளை நோய்கள் இன்றைக்குத்தான் வருகிறதா என்றால் அன்றைக்கும் வந்தன. ஞானசம்மந்தர் காலத்திலும் இத்தகைய கொள்ளை நோய்கள் இருந்தன. கொங்கு நாட்டில் உள்ள புகழ்பெற்ற திருத்தலம் திருச்செங்கோடு. அந்த இடத்தில் அர்த்தநாரீஸ்வரராக இறைவன் காட்சி தருவார். ஞானசம்மந்தர் ஒருமுறை அங்கு சென்றபோது ஆயிரக்கணக்கானோர் சங்கமாக அமர்ந்திருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் காய்ச்சல் வந்து அந்தக் கவலையில் மெலிந்து போயிருந்தனர். அவர்களைப் பார்த்து ஞானசம்மந்தர், கவலைப்படாதீர்கள் உங்களுக்கு எதுவும் ஆகாது என்று சொல்லி ஒரு பதிகம் பாடியதாக செய்திகள் உள்ளன. 'அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்' எனப் பாடப்பட்ட அப்பதிகத்திற்கு திருநீலகண்ட பதிகம் என்று பெயர். 

 

சுரம் வரும்போது இந்தப் பதிகத்தைப் பாடியதால் காய்ச்சல் குறைந்தது என்று தமிழில் செய்திகள் உள்ளன. சமகாலத்தில் இது நடைமுறைக்கு ஒத்துவருமா என்று கேட்டால், படித்தால்தானே தெரியும். அன்றைக்கு நம்முடைய தமிழுக்கு அவ்வளவு வலிமை இருந்தது என்பதைத்தான் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். பாட்டு பாடினால் காய்ச்சல் குறையுமா என்று கேட்டால் நம்பிக்கை உள்ளவர்கள் அதை நம்புவார்கள். அதில் நம்பிக்கை இல்லாதவர்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அன்றைக்கு இருந்த உணவுமுறை, வாழ்க்கை முறை, அணுகுமுறை இன்றைக்கு இருப்பதைப்போல இல்லை. இயற்கையோடு இசைந்து வாழ்ந்த அன்றைய வாழ்க்கையில் ஒரு சுரம் வந்துவிட்டால் உடனே மருத்துவமனை நோக்கி ஓடும் நிலை இல்லை. ஞானசம்மந்தன் போன்ற இறைவன் அருள்பெற்ற அடியார்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்காக இறைவனிடம் விண்ணப்பம் செய்தால் அவர்களது குறையை இறைவன் நீக்கிவிடுகிறான் என்பதற்குச் சான்றுதான்  திருநீலகண்ட பதிகம். 

 

சமயக்குறவர்களில் ஞானசம்மந்த பெருமான் வயதில் மிகவும் இளையவர். மூன்று வயதாக இருக்கும்போதே இறைவனின் அருள்பெற்று, அப்போதே பதிகமும் பாடியுள்ளார். ஞானசம்மந்த பெருமானின் தந்தை, சிறுவன் ஞானசம்மந்தரை அழைத்துக்கொண்டு சீர்காழி குளக்கரைக்குக் குளிக்கச் சென்றபோது மகனைக் கரையில் உட்காரவைத்துவிட்டு அவர் மட்டும் குளத்தில் இறங்கிக் குளிக்கிறார். குளித்துவிட்டு வந்து பார்த்தபோது மகனின் கடைவாயில் எச்சில் ஒழுகுகிறது. அதைக் கண்ட ஞானசம்மந்தரின் தந்தை, வாயில் எச்சி ஒழுகுகிறதே... ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நீ யாரிடத்தில் இருந்து பாலை வாங்கிக் குடித்தாய் என்று கேட்டபோது, அதோ பார் வானத்தில் என 'தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்' என்று பாடி இறைவனைக் காட்டுகிறார். ஆனால், அவரின் தந்தையின் கண்களுக்கு இறைவன் புலப்படவில்லை. சின்னஞ்சிறு வயதிலேயே இப்படி ஒரு அதிசயத்தை ஞானசம்மந்தர் நிகழ்த்தினார் என்பதைப் படிக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. பாடலைப் பாடி சுரத்தை நீக்க முடியும் என்று நம்புகிறவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். நம்பிக்கை உடையவர்களை அது காப்பாற்றத்தான் செய்கிறது. எனவே இந்தப் பாட்டைப் பாடினால் சுரம் நீங்குமா என்று கேட்டால் அது பாடுகிறவர்களின் பக்தியைப் பொறுத்தது என்றுதான் நான் சொல்வேன்.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.