Skip to main content

சமயக் காலத்தில் சாதி இருந்ததா? - நாஞ்சில் சம்பத் கூறும் தமிழர் வரலாறு! 

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமயக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

சமீபகாலமாக தமிழ்ச் சமூகத்தில் சாதி உணர்ச்சி பல்கிப் பெருகியிருக்கிறது என்று தமிழ் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் எல்லாம் தனக்குத்தானே சொல்லி நொந்துகொண்டிருக்கிறார்கள். அது உண்மைதானா என்று பார்த்தால், உண்மைதான் என்பதற்குச் சான்றாக சில சம்பவங்கள் உள்ளன. ஒரு சாதியற்ற சமூகத்தைப் படைக்க வேண்டும் என விரும்பும்போது கடந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. சமயக் காலத்தில் தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது?

 

சமய காலத்தில் அப்பூதி அடிகள் என்று ஒருவர் இருந்தார். பிராமண குலத்தைச் சேர்ந்தவர் அவர், வேளாளர் குலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரை தன்னுடைய குருவாகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டார். அதேபோல பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார், வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரை குருவாகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டார். ‘இவன் என் தம்பி; என் தம்பி உன் தம்பி’ என்று ராமன் லக்குவனை சுட்டிக்காட்டியும், சீதா தேவியை சுட்டிக்காட்டி ‘இவள் உன் கொழுந்தி’ என்றும் குகனிடம் கூறுகிறான். வேடர் குலத்தில் பிறந்த குகனிடம் தன்னுடைய தம்பியை உன் தம்பி என்றும் தன்னுடைய மனைவியை உன் கொழுந்தி என்றும் ராமன் கூறுவதாக கம்பன் கூறுகிறான். தமிழும் சமயமும் என்று சிந்திக்கிறபோது மதுரகவி ஆழ்வாரும் நம்மாழ்வாரும் ஒரே வரிசையில் வந்து நிற்கின்றனர். அப்பூதி அடிகளும் திருநாவுக்கரசரும் ஒரே வரிசையில் வந்து நிற்கிறார்கள். 

 

சமயத்தின் பெயரால் தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய காலத்தில், சமயத்தில்தான் இந்த சங்கதிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அன்றைக்கு எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. திருப்பாணாழ்வாரும் நந்தனாரும் இறைவனின் அன்பிற்கு பாத்திரமானார்கள். திருநாளைப்போவார் என்ற நந்தனார் தரிசிக்க, நந்தியை விலக்கச் சொல்லி இறைவன் கட்டளையிட்டார். தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த நந்தனாருக்காக நந்தியை விலக்கி எம்பெருமான் சிவன் காட்சி கொடுத்தார் என்றால் இதுதான் தமிழ்நாட்டில் காணக்கிடைக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாட்டில் நமக்குத் தெரிந்த சமய உணர்ச்சி. சமயத்திற்குள்ளே இந்த செய்திகளெல்லாம் கருவூலங்களாக கொட்டிக்கிடக்கின்றன என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. 

 

தெய்வச் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தைப் படிக்கிறபோது இந்தக் காட்சிகளையெல்லாம் அவர் வரிசைப்படுத்துகிறார். பிராமண குலத்தில் பிறந்த அப்பூதி அடிகள், வேளாண் குலத்தில் பிறந்த திருநாவுக்கரசரை தன்னுடைய இதய சிம்மாசனத்தில் வைத்திருந்தார். ஆங்கில கலாச்சாரத்தில் ஒன்றாம் ஹென்றி, இரண்டாம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி என்று அழைப்பதைப்போல தன்னுடைய குழந்தைகளுக்கு முதலாம் திருநாவுக்கரசர், இரண்டாம் திருநாவுக்கரசர், மூன்றாம் திருநாவுக்கரசர் எனப் பெயர் வைத்தார். இந்த செய்தியைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்ல, அவர் இல்லத்திற்கு திருநாவுக்கரசர் இல்லம் என்று பெயர். அவர் வீட்டில் இருந்த நெல் அளக்கும் மரக்காலுக்கு திருநாவுக்கரசர் மரக்கால் என்று பெயர். அவர் அமைத்த தண்ணீர் பந்தலுக்கு திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்று பெயர். உண்ணும்போதும் உறங்கும்போதும் இயங்கும்போதும் திருநாவுக்கரசர் குறித்தே அவர் சிந்தித்தார் என்பது சாதி வேறுபாடு அற்ற ஒரு சமூகம் அன்றைக்கு இருந்ததற்கான சான்று. சாதியை வைத்துக்கொண்டு சமகால தமிழகத்தில் இன்றைக்கு சச்சரவுகளும் மோதலும் உருவாகிவருகிறது. இதை செய்வதற்கென்றே இன்றைக்குச் சிலர் கிளம்பியுள்ளார்கள். இப்படியான சூழல்தான் இன்றைக்கு நிலவுகிறது. ‘காட்டு வேடனுக்குக் கருணை பொழிந்த உன் கருணையை மனதில் வைத்துதான் உன் காலடியில் வந்து விழுந்தேன்’ என்று குலசேகர ஆழ்வார் அன்றைக்குச் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த நாள் தமிழகம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருந்துள்ளதை அறிய முடிகிறது. 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.