Skip to main content

'வெள்ளத்தில் கோவில் மூழ்கியும் அணையாமல் எரிந்த தீபம்...' அசலதீபேஸ்வரர் கோவிலின் அதிசயம் குறித்து பகிரும் நாஞ்சில் சம்பத்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் கோவில் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சமயம் தமிழை அலங்கரித்ததும் சமயத்தை தமிழ் அலங்கரித்ததும் தமிழின் தித்திப்பான வரலாறு. குறிப்பாக நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பன்னிரு திருமுறைகளும் தமிழின் வளத்தை, மேன்மையை, அழகை தமிழர்களுக்குச் சொல்லித்தந்தன. சமய இலக்கியங்களை சாகா வரம் பெற்ற இலக்கியங்களாக நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அதிலும், திருமுறைகளைப் படிக்கிறபோது உள்ளம் குளிர்ந்துவிடுகிறது. 

 

திருமுறைகளை வாசிக்கும்போதும், அந்தத் திருமுறை தலங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்போதும் ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் செல்வது போன்ற பூரிப்பு வருகிறது. இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் மோகனூர் என்ற ஊர் அமைந்துள்ளது. அதே ஊரில் அசலதீபேஸ்வரர் கோவில் என்றொரு சிவ திருத்தலம் உள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அந்தச் சிறிய கோவில் நீரில் மூழ்கிவிடுகிறது. இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்தது. யாரும் கோவிலுக்கும் வந்து தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில நாட்கள் கழித்து தண்ணீர் மெல்ல வடிகிறது. இனி கோவிலுக்குள் சென்று தரிசிக்கலாம் என்ற நிலை வந்தவுடன் ஒரு பக்தன் கோவிலுக்குள் செல்கிறான். அந்தக் கோவிலில் வழக்கமாக எரியும் தீபம் அப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. சூறாவளியும் புயலும் வீசியதற்குப் பிறகும், மழை அடாது பெய்த பிறகும், கோவிலே நீருக்குள் மூழ்கிய பிறகும் அந்தத் தீபம் எரிந்துகொண்டிருந்தது. அந்தத் தீபத்திற்கு அசலதீபம் என்று பெயர். அசலதீபம் என்றால் உண்மையான தீபம் என்று பொருள். எத்தனை இடர் நேரினும் அந்தத் தீபம் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். அதனால்தான் அந்த சிவ திருத்தலத்திற்கு அசலதீபேஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது. இதை ஆண்டவனின் மகிமை என்று நினைப்பதா... சிவனின் சித்தம் என்று நினைப்பதா அல்லது தமிழர்களின் சிற்பக்கலை திறனுக்கு இந்தத் திருக்கோவில் சான்று என்று சொல்வதா? புயல், மழை என இயற்கை பேரிடர்களைத் தாண்டி தீபம் எரிந்துகொண்டிருக்க காரணம், கோவில் அந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான். பக்தர்கள் இந்தக் கோவிலை இன்றைக்கும் வியந்து பார்க்கிறார்கள். அசலதீபேஸ்வரரை நாடிவரும் மக்கள், தங்கள் கவலைகளையும் குறைகளையும் அவரிடம் சொல்கின்றனர். 

 

அசலதீபேஸ்வர் கோவிலுக்குச் சென்று அந்தத் தீபத்தைக் கண்டு வணங்கினால் நம்முடைய குறைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை நேற்றும் இருந்தது; இன்றும் உள்ளது. ஆகவே, ஒவ்வொரு திருக்கோவில்களுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றிற்குப் பின்னால் பல செய்திகள் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் கோவில்களைக் கோவிலாக மட்டும் பார்க்கவில்லை. நம்முடைய பண்பாட்டு அடையாளங்களின் மிச்சமாகத்தான் அவற்றைப் பார்த்தார்கள். காவிரி எங்கெல்லாம் பெருக்கெடுத்து பாய்ந்ததோ, அந்தக் காவிரி கரை ஓரங்களிலெல்லாம் பாடல் பெற்ற திருத்தலங்கள் இன்றைக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. வடகரை, தென்கரை என காவிரி ஓடிய இரண்டு கரைகளிலும் சிவனுக்கு திருக்கோவில்கள் இருந்தன. அங்கு சமயக்குறவர்கள் வந்து பாடினார்கள். அந்தத் தலங்களைப் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற வரிசையில் வைத்து இன்றைக்கும் தமிழ் இலக்கியம் போற்றுகிறது. 

 

தமிழர்களின் சிற்பக்கலைக்கும் சிவன் என்ற பரம்பொருளின் ஆற்றலுக்கும் அசலதீபேஸ்வர் கோவில் இன்று சான்றாக உள்ளது. எப்போதும் தரிசிக்கலாம், முப்பொழுதும் தரிசிக்கலாம் என்கிற அளவிற்கு காவிரிக் கரையோரம் முழுவதும் அன்றைக்கு சிவ சந்நிதிகள் எழுந்தன. அதற்குப் பிறகு கலை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இசை, காவியம் எழுந்தன. இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் எவ்வளவு சுவாரசியம் உள்ளது என்பதை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.