Skip to main content

ஆப்பிரிக்க பெண்ணின் செய்வினையால் துடிதுடித்த தமிழக பெண் - மர்மங்கள் விளக்கும் லால்குடி கோபாலகிருஷ்ணன்

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செய்வினை கோளாறுகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

"இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் செய்வினை, கருப்பு மந்திரம் பற்றிய விஷயங்களைச் சொன்னால் நம்புவதற்குக் கடினமாக உள்ளது. ஆனால், செய்வினை என்பது உண்மை. அதன் வலியும் வேதனையும் வார்த்தைகளால் விளக்க முடியாதது. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை புரியும். இன்றைக்குச் சென்னையில் இருந்துகொண்டு கோவையில் இருக்கக்கூடிய பாலத்தைத் திறந்து வைக்க முடிகிறது. கணினி மென்பொருளைத் தொலைவிலிருந்தே இயக்க முடிகிறது. வைரஸ் அனுப்பி கணினியைப் பழுதாக்கவும் முடியும். இது தொலைநிலை தொடர்பு மூலம் சாத்தியமாகிறது. அதுபோலத்தான் செய்வினையும்.

 

என்னுடைய குருநாதரான காலம் சென்ற கிருஷ்ணன் நம்பூதிரியிடம் நான் ஜோதிடம் பயின்ற போது, எனக்கு ஏற்பட்ட செய்வினை தொடர்பான நேரடியான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். யாருடைய சொந்த வாழ்க்கையையும் விளக்கக்கூடாது என்பதற்காக இந்தச் சம்பவத்தில் வரும் பெயரை மட்டும் மாற்றியுள்ளேன். 

 

சென்னை திருவல்லிக்கேணியில் இடுக்குச் சந்தில் உள்ள நெருக்கமான குடியிருப்பில் நிர்மலா என்ற ஒரு பெண் இருந்தார். கணினித் துறையில் பட்டம் பெற்று வேலைக்காக அமெரிக்கா செல்கிறார். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலையிலிருந்த அவர், சிநேகிதியுடன் ஏற்பட்ட திடீர் பிரச்சனையால் நிம்மதியை இழந்துவிட்டார். சிநேகிதி ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த வங்கியில் அவர் ஒரு மோசடி செய்ய, அதை நிர்மலா காட்டிக்கொடுத்துவிடுகிறார். அதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது. 

 

அந்தப் பெண் கைதானபோது நிர்மலாவை பழி வாங்கும் வெறியோடு பார்த்திருக்கிறார். அதை நினைக்கும் போதெல்லாம் உடலில் கம்பளிப்பூச்சி ஊர்வது மாதிரியான உணர்வு நிர்மலாவின் உடலில் ஏற்பட்டதாம். கெட்ட கனவுகள் தினமும் அவளைப் பின் தொடர கொஞ்ச நாட்களிலேயே மனநோயாளி போல மாறிவிட்டாள். ஒருகட்டத்தில் வேலையும் பறிபோய், சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார். சென்னை வந்தும் அவருக்கு நிம்மதியில்லை. இரவு நேரங்களில் அவரது அலறலால் பக்கத்து வீட்டுக்காரர்களின் தூக்கமும் பறிபோகியுள்ளது. எத்தனையோ மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியும் பயனில்லை. மனோதத்துவ நிபுணர்களிடம் அழைத்துச் சென்றும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஏதோ ஆவி பிரச்சனை என்று சொல்லி பூசாரிகளும், குடுகுடுப்பைக்காரர்களும் மாறிமாறி பணம் பறித்திருக்கிறார்கள். 

 

பின்னர், அவரது உறவினர் ஒருவர் அளித்த யோசனையால் என்னுடைய குருநாதரிடம் அழைத்துவந்தனர். அவர் ஜெபம் செய்து தன்னுடைய பிரசன்னத்தைத் தொடங்கினார். பிரசன்னம் பார்த்தபோது நிர்மலா பாம்பிடம் மாட்டிக்கொண்ட தவளைபோல துஷ்ட மந்திரத்தால் செய்வினையில் சிக்கித்தவிப்பது தெரியவந்தது. அந்த மந்திரம் அயல்நாட்டில் இருந்து ஏவலால் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செய்வினை மந்திரம் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் மந்திரம். அதன் பிறகு, என்னுடைய குருநாதரின் அறிவுரைப்படி சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் குருதி பூஜையும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை ஹோமமும் செய்தார்கள். அதன் விளைவாக ஏவல் பிரச்சனை நீங்கி நிர்மலா குணமடைந்தார். அந்தப் பெண் இப்போதும் நலமாக வாழ்ந்துவருகிறார். 

 

இனம் புரியாத பயம், தொழிலில் திடீர் முடக்கம், மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தீராத நோய்கள், தொடர்ச்சியான கெட்ட கனவுகள் ஆகியவைதான் செய்வினைக்கு ஆட்பட்டிருப்பதற்கான அறிகுறிகள். இந்தப் பிரச்சனையால் ஆட்பட்டவர்கள் இன்றைக்கும் பலர் இருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சாம்பிராணி தீபம் போடும்போது குங்கிலியத்தையும் வெண்கடுகையும் சேர்த்துப் போட்டால் செய்வினை கோளாறு இருந்தால் நீங்கிவிடும். அத்தோடு, சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் மற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றுவந்தால் செய்வினைப் பிரச்சனைகள் அகன்று எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் நலமாக வாழலாம்". 

 

 

Next Story

செவ்வாய் தோஷத்திற்கு இவ்வளவு ஈஸியான பரிகாரங்களா? - ஜோதிடர் கூறும் எளிய பரிகாரங்கள் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செவ்வாய் தோஷம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“திருமணத் தடைகளை ஏற்படுத்தும் நாகதோஷம் போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது செவ்வாய் தோஷம். ஒரு ஜாதகருக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் வரும். இது லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ அமைப்பாக அமைந்தாலும் செவ்வாய் தோஷம் வரும். பல விதமான விதிவிலக்குகளும் செவ்வாய் தோஷத்திற்கு உண்டு. 

 

குரு பார்வை, கிரக யுத்தம் உட்பட பல விஷயங்களை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடர் மட்டுமே சொல்லமுடியும். பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். செவ்வாய்க்கு காரணமான தெய்வம் முருகன். முருகப்பெருமானின் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதும், தென்னிந்தியாவிற்கே ஆதிபத்ய கிரகமாக செவ்வாய் இருப்பதுமே அதற்கு காரணம். 

 

ஆனாலும், திருமணத்திற்கு முன்னால் சில பரிகாரங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரையை தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படும். செவ்வாய் கிழமையின் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் விஷேசமானது என்பதால் அந்த நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் மிகவும் நல்லது. அதன் மூலம் திருமணத் தடையும் நீங்கும். 

 

முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்றாலும் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்கும். செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகார பூஜைகள் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும். சிவப்பு நிற சேலை, மஞ்சள் கயிறை சுமங்கலி பெண்களுக்குத் தானமாக செய்தால் செவ்வாய் தோஷத்தின் கடுமை குறையும். நான் மேலே கூறிய தோஷங்களையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வன்னி மரத்தை வணங்கலாம். 

 

கணவன் மனைவிக்குள் சண்டை மற்றும் குழந்தை பாக்கியத்தில் குறைபாட்டையும் செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடியது. எனவே செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரத்தை செய்துவிட்டு திருமணம் செய்யுங்கள். எந்த சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாயின் பரிபூரண அனுகிரகம் தேவை. எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் முருகனை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்”. 

 

 

Next Story

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு...” - மூச்சுக்காற்று மூலம் வசியம் செய்யும் ரகசியத்தை விளக்கும் ஜோதிடர் 

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், மூச்சுக்காற்று குறித்தும் பிராணாயாமம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“இன்றைக்கு எல்லோருக்கும் நிறைய பிரச்சனைகளும் நிறைவேறாத ஆசைகளும் உள்ளன. நம்முடைய மூச்சுக்காற்றைப் பயன்படுத்தியே அதை எப்படி சரி செய்துகொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

 

மூச்சுக்காற்றுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பயமாக இருக்கும்போது மூச்சுக்காற்று தடைபடுகிறது. மனம் சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனமடையும். உடலையும் மனதையும் இணைக்கக்கூடியது மூச்சுக்காற்று. வலது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சூரியகலை. இடது கால் பெருவிரலில் இருந்து கிளம்புவது சந்திர கலை. சித்தர்களின் இலக்கியத்தில் மூச்சுக்காற்று கால் என்று  பெருமைப்படுத்தப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜர் வேறு காலால் ஆடுவதையும் மதுரையில் கால் மாற்றி ஆடுவதையும் பார்க்க முடியும். ஆண் தன்மையைக் குறிக்கக்கூடியது சிதம்பர நடனம். பெண் தன்மையைக் குறிக்கக்கூடையது மதுரை.

 

சூரியன் ஆண்; சந்திரன் பெண். வலது கால் மீது இடதுகாலை போட்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் அதிகமாகும். இடது கால் மீது வலது காலை போட்டுக்கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் அதிகமாகும். வலது கால் மீது இடது கால் போட்டு அமர்பவர்கள் ஆதிக்க சக்தியாக இருப்பார்கள். மூச்சுக்காற்று ஒருநாளைக்கு 21,600 முறை நிகழ்கிறது. 10,800 உள்வாங்குதலும் 10,800 வெளியிடலும் இதில் அடங்கும். இந்த 21,600 மூச்சுக்காற்றுகளை விளக்குவதற்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில் 21,600 தங்க ஓடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மூச்சுக்காற்றியின் அவசியத்தை பல இடங்களில் சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

“காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு கூற்றை யுதைக்குக் குறியதுவாமே” என்பது திருமூலரின் வாக்கு. காலை 4 மணிக்கு நம்முடைய மூச்சு எந்தப் பக்கமாக வெளியேறுகிறது என்பதை வைத்து அன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை சொல்லிவிடமுடியும். இதைத்தான் சரஜோதிடம் என்பார்கள். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய தனிப்பட்ட ஆற்றல் பிரபஞ்ச சக்தியாக விரிவடையும். முறையான மூச்சுப்பயிற்சி செய்தால் நம்முடைய உடல் புல்லாங்குழல்; இல்லாவிட்டால் நம்முடைய உடல் அடுப்பு ஊதும் குழல். 

 

மூச்சு விடுதலில் மூன்று நிலைகள் உள்ளன. மூச்சை உள்ளே இழுப்பது(பூரகம்), இழுத்த மூச்சை உள்ளே தக்க வைப்பது(கும்பகம்), தக்க வைத்த மூச்சை வெளியே விடுவது(ரேசகம்). இதைத்தான் பிராணாயாமம் என்கிறார்கள். இதை மாறிமாறி நாம் செய்யும்போது மூச்சு நாடி சுத்தமாகிறது. இடது நாசி வழியாக நான்கு வினாடிகள் சுவாசத்தை உள்ளிழுத்து, அதை 16 வினாடிகள் தக்க வைத்து, அதை வலது நாசி வழியாக 8 வினாடிகள் வெளியிட்டால் அது ஒரு சுழற்சி எனப்படும். இதுபோல 21 சுழற்சி செய்தால் நம்முடைய உடலும் மனமும் தூய்மையடையும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். வியாழக்கிழமை அன்று வளர்பிறையாக இருந்தால் வலது நாசி வழியாக இழுத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும். தேய்பிறையாக இருந்தால் இடது நாசி வழியாக இழுத்து வலது நாசி வழியாக வெளியிட வேண்டும். 

 

தொடர்ந்து இதை செய்யும்போது நம்முடைய ஆசையும், பிரார்த்தனையும் காற்றில் கலந்து உரிய இடத்தைச் சென்றடையும். அப்படியென்றால் காற்றின் மூலம் ஒருவரை கட்டுப்படுத்த முடியுமா, வசியம் செய்ய முடியுமா என்றால் முடியும். காரணம், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருமே காற்றின் மூலமாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்கள். ஒருவர் நமக்கு அடிபணிய வேண்டும் என்று நினைத்து இதை நாம் செய்தால் நிச்சயம் அவர் நமக்கு அடிபணிவார். வயிற்றில் காற்றை அடைத்து வைத்திருக்கும் கும்பக நிலையில் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் 10,800 ஜெபம் செய்வதற்கு சமமாகும். சித்தர்களின் இந்த சூட்சம ரகசியத்தை பின்பற்றி அனைவரும் பலன்பெறுங்கள்”.