Skip to main content

பக்தர்களுக்குத் தடை! அடிவாரத்தில் வழிபட்டு செல்லும் முருக பக்தர்கள்!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Ban on devotees! Murugan devotees worshiping at the foothills!

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்றாக சேர்ந்து வழிபட தடை விதித்துள்ளது. வருகிற 30ஆம் தேதி வரை இந்த தடை இருக்கும் என்றும், கோயில்களின் தினசரி பூஜைகளை கோயில் ஊழியர்கள் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் அனுமதி தடை செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடந்துவருகிறது. 

 

இந்தநிலையில், ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக காவடி எடுத்தும், தீர்த்தக் கலசம் எடுத்தும் வருகை தருவார்கள். ஆனால், அரசின் வழிகாட்டுதல் படி தற்போது கரோனா காரணமாக பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகிய பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடனுடன் வந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே முக்கிய நாட்களில் மட்டும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. 

 

அதேபோல், நேற்று (26.04.2021) சித்ரா பவுர்ணமி நாள் என்பதால் பழனி கோவிலுக்கு அதிகமாக முருக பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டுச் சென்றனர். மேலும் அங்கேயே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கிறார்கள். இதனால் தினசரி அடிவாரப் பகுதியில் காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

 

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.