Skip to main content

காலமெல்லாம் காத்தருளும் கற்பக மூர்த்தி!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

விநாயகர் சதுர்த்தி 13-9-2018

சிவபெருமான்- பார்வதி தேவியின் குமாரர் விநாயகர். மனிதர்கள்முதல் பிரம்மாதி தேவர்கள்வரை எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே முடிய விநாயகரை வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபு. அதேபோன்று எந்தவொரு பூஜையோ, ஹோமமோ, சுபகாரியமோ நடத்துவதாக இருந்தாலும் சைவர்களும் சரி; வைணவர்களும் சரி- முதலிலில் விநாயகர் பூஜையைச் செய்த பின்னர்தான் மற்ற தேவதைகளுக்குப் பூஜைகளைச் செய்யவேண்டும். விநாயகரின் அருளைப் பெற்றால்தான் எடுத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.

ஒரு கடிதம் எழுதினாலும்கூட அதில் முதன்முதலிலில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவதுதான் நம்முடைய கலாச்சாரம். 32 வகையான வடிவங்களைக்கொண்ட விநாயகரைப் பற்றி "பிடித்து வைத்தால் பிள்ளையார்' என வேடிக்கையாகக் கூறுவார்கள். காரணம் களிமண்ணைப் பிடித்து வைத்தாலும், மஞ்சள் பொடியைப் பிடித்து வைத்தாலும், பசுஞ்சாணத்தைப் பிடித்து வைத்தாலும் விநாயகர் அருள்பாலிலிப்பார். விநாயகரை முக்கியமான மூர்த்தியாகக் கொண்டது "காணாபத்யம்' என்னும் சமயப்பிரிவு.

"ஓம்' என்ற பிரணவத்தி”ருந்து வேதங்கள் தோன்றின என்பது நமது நம்பிக்கை. அந்தப் பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர். துதிக்கையுடன் கூடிய தலையையும், துதிக்கையிலுள்ள மோதகத்தையும் சேர்த்துப் பார்த்தால் ஓங்கார வடிவம் (ஓம்) காணப்படும். இந்தப் பிரணவ மந்திரத்தை தியானம் செய்து, விநாயகப் பெருமானின் அருளால் கயிலை சென்றவர் ஔவையார். "சங்கத் தமிழ் மூன்றும் தா' எனக்கேட்ட இந்த தமிழ் மூதாட்டி, "சீதக் களாபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப...'

pillaiyar


எனத் தொடங்கும் "விநாகர் அகவலை' யோக சாத்திர வழிமுறைகளுடன் இயற்றினார்.

விநாயகர் வழிபாடு பற்றி வேதங்களில் பழமையான ரிக் வேதம்-
"கணாநாம்த்வா கணபதிம் ஹவாமஹே
கவீகவீநா முபமவ்ர ஸஸ்வதம்
ஜ்யேஷ்டராஜம் பிரஹ்மணாம் பிரஹ்மணஸ் பதஆந
சருண்வன் வாதிபி சீத சாதனம்'

என்று கூறுகிறது. எனவே வேத காலத் திலிலிருந்து விநாயகர் வழிபாடு இருந்ததை அறியலாம்.

மணிமேகலையில்,
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை

(பாயிரம் 9-12)

என, காவிரி நதியின் உற்பத்தி பற்றியும், விநாயகர் காக வடிவமெடுத்து அகத்திய முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

விநாயகப் பெருமானைப் போற்றி திருஞான சம்பந்தர்-
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே’

எனப் பாடுகிறார்.

திருமூலர்-
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே’

எனப் பாடுகிறார்.

அதேபோன்று அருணகிரிநாதர் "கைத்தல நிறைகனி அப்பமோடடல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடியுள்ளார்.

விநாயகப் பெருமானை "கணபதி' என அழைப்பார்கள். கணங்களின் அதிபதி என்று பொருள். சிவ கணங்களுக்கு அதிபதி என்பதால் அந்தப் பெயர் வந்தது. தன்னுடைய இரு தந்தங்களில் ஒன்றை ஒடித்து வியாச பகவான் கூறியதற்கேற்ப மகாபாரதத்தை எழுதினார். ஒற்றைத் தந்தத்தைக் கொண்டதால் "ஏகதந்தர்' என அழைக்கப்பட்டார். யானைத் தலையைப் பொருத்தப் பெற்றதால் "கஜானனர்' (யானை முகத்தோன்) என்றும், பெருத்த வயிறுடன் பாசம், அங்குசம், மோதகம், வரமுத்திரையுடன் கூடியவர் என்பதால் "லம்போதரர்' (மத்தள வயிறு) என்றும், பிள்ளைகள் (குழந்தைகள்) விரும்பும் நாயகனாக இருப்பதால் "பிள்ளையார்' என்றும் அன்புடன் பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.

விநாயகப் பெருமானை வழிபடும்போது அவருக்குமுன்பு “தோப்பிக்கரணம்’ போடுவது வழக்கம். ஒருசமயம் மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை விநாயகப் பெருமான் விளையாட்டாக விழுங்கிவிட்டார். அதை அவருடைய வாயிலிலிருந்து வெளியே வரவைப்பதற்காக மகாவிஷ்ணு தன்னுடைய நான்கு கைகளாலும் காதைப் பிடித்துக் கொண்டு தோப்பிக்கரணம் போட்டார். இதைப் பார்த்து விநாயகப் பெருமான் தன்னை மறந்து வயிறு குலுங்க சிரிக்க, அவருடைய வாயிலிலிருந்த சக்ராயுதம் கீழே விழுந்துவிட்டது. உடனே மகாவிஷ்ணு அதை எடுத்துக்கொண்டார். அன்றுமுதல் தோப்பிக்கரணம் போடும் வழக்கம் வந்தது. இதை தினமும் விநாயகப் பெருமானை வழிபடும்போது போட்டால் அவருடைய அருளும் கிட்டும். உடலுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் நல்ல உடற்பயிற்சியுமாகும்.

மூலாதார மூர்த்தியும், முழுமுதற் கடவுளுமான விநாயகரைப் பற்றியும், அவருடைய மகத்துவம் பற்றியும் பிருகு முனிவரால் பார்க்கவ புராணத்தில் விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது. இப்புராணத்தின் முதல் பிரிவான உபாசனா காண்டத்தில் விநாயகர் வழிபாடு, அதற்கான மந்திரம் போன்றவையும் சொல்லப்பட் டுள்ளன. இரண்டாம் பிரிவான லீலா காண்டத்தில் விநாயகரின் 12 அவதாரங்களின் கதைகள் சொல்லப் பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை நதிக்கரை, குளக்கரை போன்ற இடங்களிலும், கிராமம் தோறும் அரசமரத்தடியிலும், ஆலிலமரத்தடி யிலும் விநாயகர் வீற்றிருப்பார்.

pillaiyar



தமிழகத்தில் சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலானது, விநாயகருக்காக தனியாகக் கட்டப்பட்ட முதல் கோவில் என்ற பெருமையும் சிறப்பும் கொண்டது. இந்த விநாயகப் பெருமானைப் பற்றி காரைக்குடியில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்-

அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியம் இருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!’

என பாடுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகே அமைந்திருக்கும் பிள்ளையார்பட்டி கிராமத்திற்கு முற்காலத்தில் எக்காட்டூர் (எருகாட்டூர்), மருதங்குடி, இராசநாராயண புரம், திருவீங்கைக்குடி, திருவீங்கைச்சரம் என ஐந்து வகையான பெயர்கள் இருந்தன என்பதை கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். குடைவரைக் கோவிலான இக்கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (615- 630) அல்லது முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630- 668) ஆகிய இருவருள் ஒருவர் காலத்தில் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர்.

“கல், மரம், சுதை, உலோகம், இல்லாமலே
பல்லவன் கோவில் அமைத்தான்’

என்கிற கல்வெட்டுமூலம், பல்லவர் கால கோவில் என்பதை உணரலாம். அதன் பின்னர் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், மருது சகோதரர்கள் என பல மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக நகரத்தார் சமூகத்தினர் இக்கோவிலுக்கான திருப்பணியை இன்றுவரை தொடர்ந்து சிறப்புடன் செய்து வருகின்றனர்.

“எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி’

என மகாகவி பாரதியார் பாடியவண்ணம், கேட்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித்தரும் காமதேனு போன்று பக்தர்களுக்கு பிள்ளையார்பட்டியிலிலிருந்து அருள்பாலிலிக்கிறார் கற்பக விநாயகர்.

பெரிய குளத்துடன் (ஊருணி) கூடிய பெரிய இக்கோவிலில் ஆகம நெறிப்படி ஐந்து கால பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகர் சிலையானது சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மற்ற இடங்களில் இருப்பது போலன்றி இங்கு விநாயகர் உருவமானது நான்கு கைகளுடன் இல்லாமல் இரண்டு கைகளுடனும், வலஞ்சுழி துதிக்கையுடனும் (வலம்புரி) காட்சி தருகிறார். விநாயகர் சதுர்த்தியின்போது இக்கோவிலிலில் பத்து நாட்கள் உற்சவமும், தேர்த் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

அதேபோன்று ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியன்று இரவு உற்சவர் வெள்ளி மூஷிக (மூஞ்சூறு) வாகனத்தில் கோவில் உட்பிராகாரத்தில் திருவுலா வருவார். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று வரும் விநாயக சதுர்த்தியின்போது விநாயகரை-

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கலீம்
க்லௌம் கங்கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே
வசமியை ஸ்வாஹா'

என அவரது மூலமந்திரம் கூறி ஜபித்தால் நல்ல பலன் கிட்டும். அதேபோன்று விநாயக சதுர்த்தியன்று “விக்னேச கல்ப்ப’ நூலி”ல் சொல்லப்பட்ட வண்ணம் உஷத் காலத்தில் (சூரிய உதயத்திற்கு முன்பு) மோதகம், அவல், நெல்பொரி, சத்துமாவு, கரும்புத்துண்டு, தேங்காய், வெள்ளை எள், பூவன் பழம் என்கிற அஷ்ட திரவியங்கள் கொண்டு கணபதி ஹோமத்தை குறைந்தது நான்கு ஆவர்த்தி செய்தால் விநாயகரின் அருள் நிச்சயம் கிட்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அறுகம்புல், தேங்காய் கொண்டு ஓராண்டு கணபதி ஹோமம் செய்தால் நீண்ட ஆயுளும் செல்வ வளமும் கிட்டும். நாயுருவி சமித்தைக் (குச்சி) கொண்டு ஹோமம் செய்தால் தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெறலாம். வெள்ளை நீர்நொச்சி சமித்தைக் கொண்டு ஹோமம் செய்தால் மழை பெய்யும்.இப்படி பல தகவல்களை இந்த நூல் நமக்குத் தெரிவிக்கின்றது.

முழுமுதற் கடவுளின் அருளைப் பெற்று வளமுடன் வாழ்வோம்!

 

 

Next Story

விநாயகர் சிலை ஊர்வலம்; ஈரோடு மாநகர் பகுதியில் 500 போலீசார் குவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Ganesha Statue Dissolving Procession; 500 police in Erode metropolitan area

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1,429 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஈரோடு மாநகரில் மட்டும் 185 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதற்காக மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 185 விநாயகர் சிலைகளும் ஈரோடு சம்பத் நகருக்கு நேற்று வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஊர்வலமானது ஈரோடு சம்பத் நகர் நால் ரோட்டில் துவங்கி, பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனைச் சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்குச் சென்றடைந்தது. அங்கு ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.

 

காவிரி ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்திற்கும், ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க 500 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்காக போக்குவரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஊர்வலம் செல்லும்போது அந்த சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,429 சிலைகளில் நேற்று  வரை 770 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Next Story

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளீயீடு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Publication of guidelines for melting Ganesha idols

 

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது, அதனைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ். இயற்கை வண்ணங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

 

சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள். பூமாலைகள். அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூமாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும். மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிவகைகள் இருப்பின், அதனை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மறுபயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மேலும், மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.

 

சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையினை மூழ்கவைத்து கரைக்கலாம். தெளிந்த நீரினை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றினை உலரவைத்து தோட்டத்தில் மண்ணாகப் பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.