Skip to main content

சம்பளத்தை எதுக்கு உயர்த்தினீர்கள்? – மருத்துவர்கள் போர்க்கொடி

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
canada


இந்தியாவில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் சாமானிய மக்கள் ஒரு புன்னகையோடு கடந்து செல்வார்கள். எவ்வளவு சம்பளம் தந்தாலும் பத்தலன்னு போராட்டம் பண்ற ஒரே இனம் இந்த அரசு ஊழியர்கள் தான்ப்பா என்பார்கள். அது இந்தியா மட்டுமல்ல உலகத்தில் பெரும்பாலான நாடுகளின் அரசு ஊழியர்கள் இப்படித்தான் உள்ளார்கள் என்பவர்களும் உண்டு. ஆனால் வித்தியாசமாக கனடா நாட்டில் நாங்க பார்க்கற வேலைக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என உயர்த்தப்பட்ட சம்பளத்தை குறைக்க வேண்டும்மென அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி ஆச்சர்யப்படவைத்துள்ளனர்.

கனடா நாட்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், அரசிடம் சம்பள உயர்வு கேட்டுவந்தனர். மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதை கனடா மருத்துவ அமைச்சகம் எதிர்த்ததோடு, அவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தினால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்துவிடலாம், அந்த தொகையை கொண்டு சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம் என தன் கருத்தை தெரிவித்தது. இதனை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தான் சம்பள உயர்வை எதிர்த்து ஒரு பொதுஇயக்கம் கனடாவின் க்யூபெக் நகர மருத்துவத்துறையில் உருவானது.

க்யூபெக் நகரில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு, மருத்துவ மாணவர்களுக்கு, பேராசிரியர்களுக்கும் சம்பள உயர்வு அளித்துள்ளது. இந்த சம்பளம் மிகவும் அதிகம். எங்களுக்கு அதிகமாக உயர்த்தப்பட்ட சம்பளத்தை குறைத்து அதனை மருத்துவத்துறையின் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்கள் புதியதாக உருவாகியுள்ள அமைப்பு.

க்யூபெக் மருத்துவ பொது அமைப்பு என்கிற மருத்துவ பணியாளர்கள் அமைப்பின் தலைவர் இசபெல்லா கூறும்போது, சம்பள உயர்வை குறைக்க வேண்டுமென 213 மருத்துவ பொதுப்பணியாளர்கள், 184 சிறப்பு மருத்துவர்கள், 149 மருத்துவர்கள், 162 மருத்துவ மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என 789 பேர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இப்படி அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறைத்து மருத்துவத்துறையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையில் இன்னும் அதிகப்படியான வசதிகள் செய்துதர வேண்டும், 76 நோயாளிகளுக்கு 1 நர்ஸ் என்ற கணக்கிலேயே க்யூபெக்கில் உள்ளார்கள் அதனால் நர்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனைக்குள் பணியாற்றும் செவிலியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து சிறப்பான முறையில் பணியாற்ற வழி செய்ய வேண்டும், நோயாளியாக வருபவர்கள் அதிகமாக செலவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களின் செலவுகளை குறைக்க வேண்டும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டதை தொடர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவின் க்யூபெக் நகரில் மருத்துவ பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 1.4 சதவிதம் உயர்த்தியும், மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களுக்கு 1.8 சதவிதம் உயர்த்தி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் ஆண்டுக்கு 4,03,500 கனடா டாலர்கள் சம்பளமாக பெறுகின்றனர். மருத்துவர்கள் ஆண்டுக்கு 2,55,000 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார்கள் என்கிறது சம்பள விபரம்.

எங்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை வழங்குவதற்கு பதில், சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள், எங்கள் சம்பள உயர்வை காரணமாக்கி நோயாளிகளுக்கு தரப்பட்ட வசதிகளை நிறுத்துவதை அரசாங்கம் நிறுத்தி அதிகப்படியான வசதிகளை செய்து தர வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்கள். இந்த கடிதம் கடந்த பிப்ரவரி 25ந்தேதி எழுதப்பட்டது. இந்த கடிதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தீவிர ஆலோசனையில் உள்ளது கனடா அரசாங்கம்.

இதுவே இந்தியாவாக இருந்தால் ??????

சார்ந்த செய்திகள்

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

இந்தியாவுடன் மோத விரும்பவில்லை” - கனடா பிரதமர்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Canadian Prime Minister says Doesn't want to clash with India

 

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

 

அவரது குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

 

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் மீண்டும்  விசா சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டது.

 

இந்த பிரச்சனை பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “இந்தியாவுடனான சண்டையை கனடா இப்போது விரும்பவில்லை.  ஆனால், ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம். பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகத்திற்கும் ஆபத்தாகி விடும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது. 

 

ஆரம்பத்தில் இருந்தே, இந்த விவகாரத்தை இந்திய அரசும், உலக நாடுகளும் தீவிரமாக எடுத்துக் கொள்ள உண்மையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். ஆனால், இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறி தூதரக அதிகாரிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து அவர்களை வெளியேற்றியது. இதனால், நான் ஏமாற்றமடைந்து கவலையடைந்தேன். இது உலகெங்கும் உள்ள உலக நாடுகளுக்கும் கவலை அளிக்கிறது. 

 

ஏனென்றால், ஒரு நாடு மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளை பாதுகாக்காவிட்டால், அது சர்வதேச உறவுகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதனால், ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்றி முயற்சித்தோம். தொடர்ந்து அவ்வாறே செயல்படுவோம். இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அதனால், நாங்கள் இப்போது சண்டை செய்ய விரும்பவில்லை. ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்” என்று கூறினார்.