Skip to main content

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதட்டம்... கைது செய்யப்பட்ட மரியம் நவாஸின் கணவர்...

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

maryam nawaz husband safdar arrested

 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் மரியம் நவாஸின் கணவர் சப்தார் அவான் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் இம்ரான் கான், ராணுவத்தின் கைப்பாவையாகச் செயல்படுவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, அவரை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில், அந்நாட்டின் 11 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் லாகூரில் உள்ள குஜ்ரான்வாலாவில் பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று கராச்சியில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்தின இந்த எதிர்க்கட்சிகள்.

 

இந்தப் பேரணியில் பேசிய நவாஸ் ஷெரிஃபின் மகளும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ், "உங்களுக்கு (இம்ரான் கான்) மக்களிடம் அன்பைக் காட்டத் தெரியாவிட்டால், உங்களுக்கு அதனைக் கற்பிக்க யாரும் இல்லை என்றால், நீங்கள் நவாஸ் ஷெரீப்பிடமிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் கரோனா தொற்றுக்கு முன்பே சரிந்துவிட்டது. இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் எதிர்மறை வளர்ச்சியுடன் பாகிஸ்தான் போராடுகிறது" எனத் தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த போராட்டங்களால் பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவிவரும் நிலையில், மரியம் நவாஸின் கணவர் பாகிஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மரியம் நவாஸின் கணவர் சப்தார் அவான் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்த போலீஸார் அறைக் கதவை உடைத்து அவரை கைது செய்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.