Skip to main content

கேபிடலில் நடந்த சம்பவம்; மனமுடைந்த ஜோ பைடன்!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

JOE BIDEN

 

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் கேபிடல். இக்கட்டடத்தை நோக்கி வேகமாக காரை ஓட்டிவந்த ஒருவர், அங்கு இருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்தார். இன்னொரு அதிகாரி காயமடைந்தார்.  மேலும் காரை ஓட்டிவந்த நபர், காரிலிருந்து வெளியில் குதித்து, காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முற்பட்டார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள், அந்த நபரை சுட்டுக்கொன்றனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள அந்த நாட்டுக் காவல்துறை அதிகாரிகள், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளனர். அதேநேரத்தில் அமெரிக்க ஊடகங்கள், இந்தியானா பகுதியைச் சேர்ந்த 25 வயதான நோவா கிரீன் என்பவரே இந்த செயலில் ஈடுபட்டார் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும், அவரின் சமூகவலைதள பதிவுகள் அவர் விரக்தி மற்றும் சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டவர் என்பதை தெரிவிப்பது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில், இந்த சம்பவதிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காவல்துறை அதிகாரி உயிரிழந்ததை அறிந்து தானும், தனது மனைவியும் மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "அமெரிக்க கேபிடல் சோதனைச் சாவடியில் நடந்த வன்முறை சம்பவத்தில், கேபிடல் காவல்துறை அதிகாரி வில்லியம் எவன்ஸ் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார் என்பதையறிந்து, நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) மனமுடைந்தோம். அதிகாரி எவன்ஸின் குடும்பத்தினருக்கும், அவரது இழப்பால் வாடும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.

 

மேலும், காவல்துறை அதிகாரியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிபர் தேர்தல்; எலான் மஸ்க்கின் கருத்தால் பரபரப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Elon Musk says he can't even imagine voting for Joe Biden

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனரும், உலகப் பணக்காரருமான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மின்சார வாகன உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் எலான் மஸ்க் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த முறை ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எலான் மஸ்கின் இந்த கருத்து ட்ரம்ப்பிற்கு ஆதரவாக இருக்கும் என அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.