Skip to main content

ஐஎஸ்ஐ தலைவர் விவகாரம்: முடிவுக்கு வரும் பாக். பிரதமர் - இராணுவ தளபதி மோதல்? 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

imran khan

 

பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்துவந்தார். இந்தநிலையில், அவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நதீம் அகமது அஞ்சும் என்பவர் ஐஎஸ்ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் இராணுவம் கடந்த வாரம் அறிவித்தது.

 

இருப்பினும் ஐ.எஸ்.ஐ. தலைவராக நதீம் அகமது அஞ்சும் என்பவர் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் பாகிஸ்தானின் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

மேலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, தற்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருக்கும் ஃபைஸ் ஹமீதே அப்பதவியில் தொடர வேண்டும் என  இம்ரான் கான் விரும்புவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. இதனால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

 

udanpirape

 

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானும், இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவும் கடந்த திங்கட்கிழமை (11.10.2021) சந்தித்துப் பேசினர். இந்தநிலையில், பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, "புதிய ஐ.எஸ்.ஐ. டிஜி நியமனம் குறித்து பிரதமருக்கும் ராணுவ தளபதிக்கும் இடையிலான ஆலோசனைகள் நிறைவடைந்துவிட்டது. புதிய நியமனத்திற்கான நடைமுறை தொடங்கிவிட்டது" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் பிரதமர் இம்ரான்கானுக்கும், இராணுவ தளபதிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இம்ரான்கான் வழக்கில் புதிய திருப்பம்; பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Pakistan court action order on New twist in Imran Khan case

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை கடந்த ஜனவரி 31ஆம் தேதி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனை காரணமாக அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியிருந்தது. 

இந்த நிலையில், பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இம்ரான்கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அந்த தீர்ப்பில், இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு, ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

Next Story

நிலவி வந்த இழுபறி; பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் அறிவிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Pakistan's new prime minister announced

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி  புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும், புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.