Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சிங்கப்பூரின் அறிவிப்பு!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

singapore

 

இந்திய பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர்! கரோனா பரவல் காரணமாக இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதியிலிருந்து மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரவும், தங்கள் நாட்டின் வழியாக வேறு நாட்டிற்கு செல்லவும் அந்தநாட்டு அரசு அனுமதியளித்தது.

 

அதேநேரத்தில், அந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் சிங்கப்பூரில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது இந்தியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருந்தால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

 

இதன்படி நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ள இந்தியா, இந்தோனேசியா பயணிகள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. அதேபோல் டிசம்பர் ஆறிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டு பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார். 

Next Story

ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
 
Notification of helpline numbers for Indians in Japan

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுனாமி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்தியத் தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 90 நிமிடங்களில் 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 21 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5க்கும் மேல் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள 36,000 வீடுகளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களை இந்தியத் தூதரகம் சார்பில் அறிவித்திருக்கிறது. மேலும், அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, +81 8039301715, +81 7014920049, +81 8032144734, +81 8062295382, +81 8032144722 ஆகிய உதவி எண்களும், cons.tokyo@mea.gov.in, seco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளை உதவிக்காகத் தொடர்பு கொள்ளலாம் எனத் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.