
உலகை அச்சுறுத்திவரும் கரோனா பரவல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைந்துவருகிறது. ஆனால் சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டிலும் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தநாட்டில் நேற்று (10.11.2021), தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று மட்டும் அந்த நாட்டில் 11,883 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இந்தநிலையில், பிரான்ஸ் நாட்டில் கரோனா ஐந்தாவது அலையின் தொடக்கத்தை உணர்வதாக பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "சில அண்டை நாடுகள் ஏற்கனவே கரோனாவின் ஐந்தாவது அலையை சந்தித்துவருகின்றன. பிரான்ஸ் நாட்டில் நாங்கள் எதை உணர்கிறோமோ, அது ஐந்தாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என தெளிவாகத் தெரிகிறது." என கூறியுள்ளார்.