Skip to main content

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட பத்திரிகையாளர்கள் - உறுதி செய்த பிரான்ஸ்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

nso group

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறி வருகிறது.

 

இதற்கிடையே, அண்மையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க அழுத்தம் கொடுத்தார். இதன்பிறகு பிரான்ஸ் சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், பெகாசஸை தயாரித்து விற்பனை செய்யும் என்.எஸ்.ஓ குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட தகவல்களை பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டதோடு, பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இதன்தொடர்ச்சியாக 28 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இஸ்ரேலிய அதிகாரிகள், என்.எஸ்.ஓ அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனத்தின் கணினிகளும் ஆவணங்களும் ஆழமாக தோண்டித் துருவப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் கூறியுள்ளன.

 

இந்தநிலையில் என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனம், தனது வடிக்கையாளர்களாக உள்ள பல்வேறு அரசாங்கங்களை, பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதிருந்து தற்காலிகமாக தடை செய்துள்ளது. என்.எஸ்.ஓ க்ரூப் நிறுவனம், பெகாசஸ் தவறாக பயன்படுத்தப்பட்டதா என விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், அதனையொட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர், என்.பி.ஆர் ஊடகத்திடம் தெரிவித்தவுள்ளார்.

 

இதற்கிடையே பிரான்சின் இணைய பாதுகாப்பு நிறுவனம், அந்தநாட்டு ஊடகமான மீடியாபார்ட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் பெகாசஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவன பத்திரிகையாளர்கள் இருவரது தொலைபேசிகள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யபட்டதாக மீடியாபார்ட் அதிகாரப்பூர்வமாக புகாரளித்திருந்ததும், அதனை தொடர்ந்து பிரான்ஸ் நாடு விசாரணையை தொடங்கியதும் குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.