Skip to main content

கடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை! - இங்கிலாந்து இளவரசரின் கதை!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

england prince philip incident his history

 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'சூரியன் மறையாத தேசம்' எனப் பெயர் பெற்ற நாடு இங்கிலாந்து. இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவி வகித்து வருகிறார். இவரது கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப், 99 வயதில் காலமானார். இளவரசர் பிலிப் காலமானதை, பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக நேற்று (09/04/2021) அறிவித்தது.

 

இங்கிலாந்து இளவரசர் பிலிப் குறித்து பார்ப்போம்!
 

கிரேக்க மற்றும் டென்மார்க் அரச குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் பிலிப். கிரீஸ் நாட்டின் கோர்பூ தீவில் 1921- ஆம் ஆண்டு பிறந்தார் இளவரசர் பிலிப். தனது 18 ஆவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 1947- ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி, எலிசபெத்தை இளவரசர் பிலிப் கரம் பிடித்தார். 1953- ஆம் ஆண்டு பிரிட்டன் மாமன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்தார். 1953- ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பட்டம் சூட்டப்பட்டார். அதுமுதல் இளவரசர் பிலிப், 'எடின்பெரோ கோமகன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்- இளவரசர் பிலிப் தம்பதிக்கு சார்லஸ் உட்பட மூன்று மகன்களும், இளவரசி ஆனி என்ற மகளும் உள்ளனர். இளவரசர் வில்லியம் உட்பட 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

 

england prince philip incident his history

 

கடந்த 2017- ஆம் ஆண்டு தனது அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். ராணி இரண்டாம் எலிசபெத்தோடு, பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் இளவரசர் பிலிப் வீடு திரும்பினார்.

 

இங்கிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், லண்டன் மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (09/04/2021) காலை இளவரசர் பிலிப் இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 10- ஆம் தேதியுடன் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இளவரசர் பிலிப் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலாந்து இளவரசரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.