Skip to main content

திருமணத்திற்கு மறுத்த காதலன்; தற்கொலைக்கு முயன்ற பெண்

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Youth who refuse to marry to woman

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரைச் சேர்ந்த ராயப்பன் என்பவரது மகள் ஆரோக்கியஷாலினி(21). இவரும் விருத்தாசலம் அருகேயுள்ள தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அருள்ராஜ்(27) என்பவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் அருள்ராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வரும் வரை ஆரோக்கியஷாலினி காத்திருந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் சென்ற ஆரோக்கியஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். ஆனால் அவர், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அருள்ராஜ் பெற்றோர் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியஷாலினி, தொரவளூரில் உள்ள அருள்ராஜ் வீட்டிற்கு சென்று மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர், அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆரோக்கியஷாலினி கையில் வைத்திருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்ராஜும், ஆரோக்கியஷாலினியும் காதலித்து வந்ததும், அருள்ராஜ் திருமணம் செய்ய மறுத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அருள்ராஜின் பெற்றோரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆரோக்கியஷாலினிக்கும், அருள்ராஜிக்கும் நேற்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எதிரில் உள்ள கோவிலில் போலீசார் மற்றும் இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.