Youth who refuse to marry to woman

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரைச் சேர்ந்த ராயப்பன் என்பவரது மகள் ஆரோக்கியஷாலினி(21). இவரும் விருத்தாசலம் அருகேயுள்ள தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அருள்ராஜ்(27) என்பவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அருள்ராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வரும் வரை ஆரோக்கியஷாலினி காத்திருந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் சென்ற ஆரோக்கியஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். ஆனால் அவர், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அருள்ராஜ் பெற்றோர் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியஷாலினி, தொரவளூரில் உள்ள அருள்ராஜ் வீட்டிற்கு சென்று மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர், அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆரோக்கியஷாலினி கையில் வைத்திருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்ராஜும், ஆரோக்கியஷாலினியும் காதலித்து வந்ததும், அருள்ராஜ் திருமணம் செய்ய மறுத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அருள்ராஜின் பெற்றோரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆரோக்கியஷாலினிக்கும், அருள்ராஜிக்கும் நேற்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எதிரில் உள்ள கோவிலில் போலீசார் மற்றும் இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.