இரவில் வெகுநேரம் ஃபோன் பேசியதைக் கண்டித்த கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு கலை நிபுணர் இலக்கியா. இவர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேரந்த பாலமுருகன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் சில மாதங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்காக இருவரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே இலக்கியா மீது தவறு இருப்பதால், காவல்துறையினர் அவருக்கு அறிவுரை வழங்கி கணவரோடு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகல், இரவு என நாள் முழுவதும் தொடர்ந்து யாருடனோ இலக்கியா ஃபோன் பேசியுள்ளார். இதனால் கணவருக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்றும் (26.09.2021) அவர் யாருடனோ ஃபோன் பேசிக்கொண்டிருந்ததால் இலக்கியாவிடம், யாரிடம் ஃபோன் பேசுகிறாய் என்று பாலமுருகன் கேட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த இலக்கியா, அருகில் கிடந்த கத்தியை எடுத்து பாலமுருகனின் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார். தடுக்க வந்த மாமியாரையும் கடித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பாலமுருகனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இலக்கியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.