Skip to main content

சட்ட கல்லூரிகளில்  எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்?  துணைவேந்தர் பதிலளிக்க உத்தரவு

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
ambedkar

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாத ஆசிரியர்களை களைவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 29ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தன்னை மீண்டும் நியமிக்க கோரி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தகுதியில்லாத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை களைவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 29ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட்டார்.

மேலும், சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர், பேராசிரியர்,  துறை தலைவர் மற்றும் முதல்வருக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி என்ன?,   தற்போது பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

 

சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்ட கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர், தற்போது பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர் எந்த விவரத்தையும், எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறித்த விவரங்களையும்  வரும் 25ம் தேதி தாக்கல் செய்யவும் பல்கலைகழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சமத்துவத்தின் சின்னம்’ ... அண்ணல் அம்பேத்கருக்கு அமெரிக்காவில் சிலை 

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

statue of equality Ambedkar in America

 

அமெரிக்கா, மேரிலாந்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கரின் 19 அடி சிலையை நிறுவப்படவுள்ளது.

 

கடந்த 1891 ஆண்டு ஏப்ரல் 14, ஆம் தேதி பிறந்த டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர் அரசியலமைப்புச் சபையின் மிக முக்கியமான வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார். இதனால், ‘இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி’ என பெருமையாக அழைக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். தனது இறுதி மூச்சு வரை இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் தனிச் சிறப்பு மிக்கவர். இப்படியாகத் தனது வாழ்க்கை முழுவதும் படிப்பு, சமூகப் பணி என உழைத்தவர் இறுதியாக அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று இறந்தார்.

 

இந்த நிலையில், மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை அக்டோபர் 14 தேதி திறக்க உள்ளனர். 19 அடி உயரம் என சொல்லப்படும் இந்த சிலையை, ராம் சுதார் என்ற புகழ்பெற்ற சிற்பியை வைத்து வடித்துள்ளனர். இவர் இதற்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சிலை குறித்து அம்பேத்கர் சர்வதேச மையம் (ஏஐசி) கூறுகையில், “இதுதான், இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் நிறுவியுள்ள பாபாசாகேப்பின் மிகப்பெரிய சிலை. மேலும் இந்த மையத்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் நினைவகத்தின் ஒரு பகுதியாகவும் இது நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான அம்பேத்கரிய இயக்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் இந்த சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் கருத்துகளையும், போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கவும் உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதைத் தவிர்த்து உலகநாடுகளில் அம்பேத்கர் சிலைகள், வால்வர்ஹாம்ப்டன், இங்கிலாந்து- கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா- சஜோக,ஹங்கேரி - கொயாசன் பல்கலைக்கழகம், ஜப்பான்- சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

அன்று திருவள்ளுவர், இன்று அம்பேத்கர் - தொடரும் காவி சர்ச்சை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Thirumavalavan condemns poster of Ambedkar dressed in saffron

 

சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே காவல்துறையினரால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது.

 

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி, அது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளான நிலையில், தற்போது அம்பேத்கருக்கும் காவி உடை அணிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்ததற்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில், “சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை; பார்ப்பனிய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை, குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.