Skip to main content

‘குழந்தையின் தந்தை எங்கே?’- உறவினர்களின் கேள்வியால் தற்கொலை செய்துகொண்ட தாய்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

‘Where is the father of the child?’ - The mother upset

 

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பன்னீர் செல்வம் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 37). மருத்துவரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்திவருகிறார். இவரது மனைவி சஞ்ஜினி (30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்துவந்தனர். கோகுல் தொட்டியத்தில் வசித்துவருகிறார். சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல மருத்துவர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்துவந்தார். அது மட்டுமின்றி சஞ்சினி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்திவந்தார். இந்த நிலையில், சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் (19.09.2021) காது குத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.

 

அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், மகனின் காது குத்து விழாவின்போது கணவரைப் பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது