Skip to main content

எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சீமான்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
seenivasan

 

காவிரி நதிநீர் உரிமைக்காக கடந்த 15-09-2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரைத் தீக்கிரையாக்கிக்கொண்டு உயிர் நீத்த  பா.விக்னேசுவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 16.09.2018 காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,   ‘’பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் காவிரி நதிநீர் உரிமையை மீட்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் அவ்வுரிமையின் அவசியத்தை உணர்த்தும்பொருட்டு தன்னுயிரைத் தந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசின் நினைவுநாள் இன்று. நாம் தமிழர் என்ற உணர்வினைக் கொண்டு ஒருங்கிணைந்து நின்று, இழந்துவிட்ட உரிமைகளை மீட்கவும், பாதுகாக்கவும் போராடிக் கொண்டிருக்கிற நாம் தமிழர் பிள்ளைகள் அந்த ஈக மறவனுக்குப் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். 

 

எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சனநாயகப் பேராற்றல்களாக இருக்கிற ஊடகங்கள்தான் அதனை மக்களுக்குச் சொல்ல வேண்டும். பொதுவெளியில் தமிழினத்தின் பெரும் அறிஞராக இருக்கும் மதிப்புமிக்க வைரமுத்து அவர்களைப் பற்றியும், அவரது தாயார் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதற்கு அவரது கட்சியின் தலைமையோ, ஆளுகிற அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைப் போலத் தற்போது காவல்துறையினரைப் பற்றியும், உயர்நீதிமன்றத்தைப் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையினைத்தான் இதுவெல்லாம் காட்டுகிறது. இதனைத்தான் அதிகாரத்திமிர் என்கிறோம். அப்படியானால், சட்டமும், திட்டமும் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அப்பாவிகளுக்கு மட்டும்தானா? என்கிற கேள்வியைத்தான் இதுவெல்லாம் எழுப்புகிறது. அதிகாரத்தின் உயரத்தில் இருப்பவர்களுக்குச் சட்டம் கைகட்டி நிற்கும் என்றால் எப்படிச் சனநாயக ஆட்சிமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்? சட்டம் அடிபணிந்து நிற்குமானால் பாரபட்சமின்றி மக்களுக்குச் சமநீதியை வழங்கும் என்று எவ்வாறு நம்ப முடியும்? எச்.ராஜா தான் வகிக்கிற பொறுப்பு, தனது வயது போன்றவற்றிற்காகவாவது பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து வாய்க்கு வந்தபடி தான்தோன்றித்தனமாகப் பேசுவது அழகல்ல! 


விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ் மண்ணில் திட்டமிட்டுத்தான் உட்புகுத்தப்பட்டது. 10, 15 ஆண்டுகளாகத்தான் அதிகளவில் இது பெரிதுபடுத்தப்படுகிறது. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அதிகளவில் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இங்கு விநாயகரைக் கொண்டாடுகிற அளவுக்குத் தமிழர் இறையாக இருக்கிற முருகனை எவரும் கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி, குருநானக், சரஸ்வதி பூஜை இவற்றிற்கெல்லாம் அரசு விடுமுறை விடப்படுகிறது. தைப்பூசத்திற்கு மட்டும் விடுமுறைவிடப்படுவதில்லை. இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களும், வழிபாடுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு அதனை மீட்டெடுப்பதற்குத்தான் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்கி எல்லாவற்றையும் மீட்டெடுக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். 

 

நீண்ட காலச் சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு, 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுநரை ஒப்புதல் அளிக்கச் செய்வதுதான் எழுவரின் விடுதலைக்கான வாய்ப்பாக இருக்கிறது. இதில் ஆளுநர் தாமதப்படுத்துவது மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது. அத்தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம். 


தனது தந்தை செய்யாததைத் தான் செய்யப்போவதாகக் கூறுகிறார் ஸ்டாலின். இவர்கள் தனது ஆட்சியில் முதலில் என்ன செய்தார்கள்? மாநிலத் தன்னாட்சி என முழக்கத்தை முன்வைத்தார்கள். இன்றைக்கு மாநிலத்தில் என்ன தன்னாட்சி அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள்? மாநில அரசிடம் கல்வி, மருத்துவம், வரி என எந்த அதிகாரமும் இல்லை. இப்போது தேர்வு முறையும் கையைவிட்டுப் போய்விட்டது. நாங்கள்தான் படிக்க வைத்தோம் என்கிறார்கள். தான் விரும்பிய படிப்பைப் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனாளே தங்கை அனிதா, அதற்கு யார் காரணம்.? யார் அதற்குப் பொருட்பேற்பது? இந்தியை எதிர்த்துப் போராடினோம் என்றார்கள். இந்தியை எதிர்க்காத கேரளாவில் இந்தி குறைவாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு எந்த இடத்தில் இந்தி இல்லை? செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் முத்திரையே இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கிறது. ஆகவே, இவர்கள் இடுவது எல்லாம் வெற்றுக்கூச்சல்கள்தான்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.