Skip to main content

கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் தேவையென்ன? -ஆய்வு நடத்தும் அறநிலையத்துறை அமைச்சர்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

கோவில்களின் அழகு மற்றும் சிலைகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.  உலகிலுள்ள பெரும்பாலான பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள் உள்ளன. அவை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக உள்ளன. அக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து, பார்போற்றும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாடு அரசு 2022-23 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தற்போது ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

 

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலை ஆய்வு செய்துவிட்டு, திருக்கோவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள், திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துதல், மற்றும் கோவில் நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர்,  கோவில் நிர்வாகிகள், மற்றும் பணியாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

“தமிழ்நாடு அரசு,  இந்து சமய  அறநிலையத்துறையின் மூலம் திருக்கோயில்களை மேம்படுத்தவும், பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து தருவதற்கும்,   பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. சட்டப்பேரவை மானிய கோரிக்கையில்,  ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, திருக்கோவில்களின் தேவைகளையும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்  ஆய்வு செய்து வருகின்றனர்.

 

What is the need of the devotees going to the temple? -The Minister of Charities conducting the study!

 

அதனடிப்படையில்,  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சக்தீஸ்வரன் திருக்கோவிலில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டதோடு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வீர வசந்த ராயர் மண்டபத்தில் நடைபெறவுள்ள திருப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள வசந்த மண்டபமும் ஆய்வு செய்யப்பட்டது.

 

தற்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஜீயருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அடுத்து,  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும்,  நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 12 அம்மன் திருக்கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி, குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் நடைபெறவுள்ள 108 திருவிளக்கு பூஜை தொடங்கி வைக்கப்படவுள்ளது.” என்றார்.  

 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். கோவில் என்பது பண்டைய காலத்தில் ஒரு பண்பாட்டு மையமாகவே திகழ்ந்திருக்கிறது. கலை, இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக்கலை எனக் கலையோடு தொடர்புடையதாகவும் கோவில்கள் உள்ளன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோர்கள் சொன்னதற்குப் பின்னால், விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போன்ற வாழ்வியலும் உண்டு.

 

தமிழக அரசு மேற்கொள்ளும் கோவில் புனரமைப்பு பணிகள் மூலம் பக்தர்கள் மனம் குளிர்வதோடு, நாட்டுக்கும் நல்லது நடக்கும் என்பது பெரும்பாலானோரின்  நம்பிக்கையாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.