Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

 we have two ministers but The plans  not working properly  KN Nehru

 

திருச்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக முதன்மைச் செயலாளர் கே‌.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்த கே.என்.நேரு, “திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் பேரில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுக் கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை செய்துவருகிறார். திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் இந்நாள்வரை முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறையாகச் செயல்படாமல் உள்ளது. 
 

மத்திய அரசுக்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை அதிமுக அரசு செயல்படுத்திவருகிறது. காவிரி குண்டாறு திட்டத்தால் சேலம் மாவட்டம் மட்டுமே வளம்பெறும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை. மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். கடந்த காலங்களில் நெய்வேலியில் 650 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டு அதில் 8 பேர் மட்டும்தான் தமிழர்களாக உள்ளனர். அதேபோல் திருச்சி பொன்மலை ஒர்க்ஷாப்பில் அதிகப்படியான வெளிமாநில ஆட்களைப் பணியில் அமர்த்தி உள்ளனர். வருகிற மே மாதம் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இலவச வீடு பட்டா, சுகாதாரமான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
 

இதேபோல், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.ஏல்.ஏ. முன்னிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன்,  கோவிந்தராஜ், கவிஞர் சல்மா, செந்தில், மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றியப் பெருந்தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.