Skip to main content

குழந்தையின் மருத்துவத்திற்கு வசதியில்லாமல் அவதிப்படும் கூலித் தொழிலாளி! முதல்வருக்கு வேண்டுகோள்! 

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

Wage worker suffering without access to child medical care! Appeal to the MK Stalin

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அசோக் - கமலி தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிழைப்பு தேடி குழந்தை நட்சத்திராவுடன் சென்னை சென்றவர்கள் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு நட்சத்திராவிற்கு உடல்நலம் பாதிக்கவே, சென்னை ராமாபுரத்தில் உள்ள பேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள் நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். குழந்தையின் சிறுமூளை பாதிப்பிற்கு உள்ளாகி சுய நினைவிழந்து உடல்நலம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்துள்ளார்.  மருத்துவர்கள் ஊசி மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வெளியில் வாங்கி வருமாறு அசோக்கிடம் கூறியுள்ளனர். 

 

இந்த நிலையில், சுயநினைவு இழந்த நட்சத்திராவின் உடல்நலத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன் தனது சொந்த ஊருக்கு சென்று கடன் வாங்கியாவது குழந்தையை காப்பாற்றி விடலாம் என அங்கிருந்து உளுந்தூர்பேட்டை வந்துள்ளனர். பின்னர் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப்பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.  


உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை பெற்று வந்த நிலையில், அதனை ஃப்ரிட்ஜில் பதமாக வைப்பதற்கு வசதி இல்லாமல், மண்பானையில் தண்ணீரை ஊற்றி அடியில் உள்ள மணலில் மருந்துகளை புதைத்து வைத்து தினந்தோறும் ஊசி மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களில் மருந்துகள் கெட்டுப்போவதால் சரியான மருந்துகள் கொடுக்கமுடியாமல், சிறுமியின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக முதல்வர் தங்கள் பிள்ளை நட்சத்திராவிற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்யவேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.