Skip to main content

கலெக்டர் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Virudhunagar Collector Meganathan

 

உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். பணியே உயர்ந்தது. ஐ.ஏ.எஸ். என்பது, அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணியாகும். ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளைச் செய்ய முடியும்.

 

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி இருக்க வேண்டுமென்றால் – தனது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக்கொண்டு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

 

ஐ.ஏ.எஸ். பணிக்கான தகுதிகள் என்னவென்றால் – நேர்மறை எண்ணம், தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன், தைரியம், உறுதியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, ஒவ்வொரு நெருக்கடியான சூழலிலும் அமைதியைக் கடைப்பிடித்தல், நல்ல அறிவுத்திறன், சிறப்பான பொதுஅறிவு, நல்ல தகவல்தொடர்பு திறன் எனப் பட்டியலிடலாம். 

 

Virudhunagar Collector Meganathan

 

‘எந்த மாவட்ட கலெக்டரும் சொல்லாததை, செய்யாததை, சின்னஞ்சிறு பிள்ளைகளும்கூட, கலெக்டர் பெயர் ‘மேகநாத்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார், நமது விருதுநகர் மாவட்ட கலெக்டர்.’ என்று ‘ட்வீட்’ செய்துள்ளார், மணிகண்டன். ‘எல்லா மாவட்டத்துக்கும் உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால், அரசுப் பள்ளி கண்டிப்பாக முன்னேறிவிடும். கொடுத்து வச்ச விருதுநகர் மாவட்டம்.’ என்கிறார் சசிகுமார். 

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டப்படுவது ஏன்?

 

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். பொதுமக்களின் குறைகளை அறிந்து பதிலளிப்பதுடன், பிரச்சனைகளுக்குத் தீர்வும் காண்கிறார். 

 

Virudhunagar Collector Meganathan

 

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த தகவலை தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார் மேகநாத ரெட்டி. பதிலுக்கு மாணவர்களும் நன்றி தெரிவித்துவருகின்றனர். அதற்கு மேக்நாத ரெட்டி ‘தம்பிகளா நன்றியெல்லாம் போதும்.. சோசியல் மீடியாவை மூடிவிட்டு, சோசியல் சயின்ஸ் புத்தகத்தைக் கையில் எடுத்துப்  படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு நடக்கிறது.’ என்று மாணவர்களுக்கு ஒரு அண்ணனாக இருந்து அன்புடன் அறிவுறுத்தியுள்ளார். மக்களிடம் காட்டிவரும் இந்த நெருக்கம்தான், அவரைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.


 
அதேநேரத்தில் ‘கடையைத் திறந்தோமா? காலேஜ் இல்லைன்னு சொன்னோமான்னு இருங்க தெய்வமே! மழையில் சாப்பிட்டு தூங்குபவனைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்த வேண்டாம், தெய்வமே!’ என்று உரிமையுடன் ரீ ட்வீட்டில் கலெக்டரையே கலாய்க்கும் ஹரிஹரன் போன்ற பொதுஜனமும் இல்லாமல் இல்லை.  

 

பழனி ராஜ்குமார் போன்றவர்களோ ‘மக்களுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் சரிதான்! பல வருடங்களாக வைப்பாறு தூர்வாராமல் கிடக்கிறதே? கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறதே? இதற்கெல்லாம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்? அரசாங்கமோ, அமைச்சரோ செயல்படுவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பித்ததுபோல் தெரியவில்லையே?’ என்று மாவட்டத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவும் செய்கின்றனர்.

 

ஹரீஸ் என்பவர் ‘சமூக வலைத்தளங்களில், ஒரு மாவட்ட ஆட்சியரால் மக்களை இந்த அளவுக்கு நெருங்க முடிகிறதென்றால், தற்போதைய அரசாங்கம், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரியின் கைகளைக் கட்டிப்போடாமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதுதான்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

மக்கள் கேள்வி கேட்பதும், மாவட்ட ஆட்சியர் பதிலளித்து தீர்வு காண்பதும், அரசாங்கம் இவற்றுக்கு இசைவதும் ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்லவா!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டம்; தயாரித்தவர் உடல் சிதறி உயிரிழப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024

 

வெடிமருந்தும், பட்டாசுகளும் சேர்ந்து பயங்கரமாக வெடித்ததில் வீடு தரைமட்டமானதுடன் தயாரித்த தொழிலாளியும் உடல் சிதறி பலியான சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி பகுதியிலுள்ள திருத்தங்கல் நகர் பகுதியைச் சேர்ந்த சத்திஸ்வரன். இவர் சிவகாசியின் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தவர். இவரது மனைவி ராமலட்சுமி. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சத்திஸ்வரன் தன் குடும்பத்துடன் தனது மனைவியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட கொக்குகுளம் கிராமத்தில் குடியேறியிருக்கிறார். அங்கிருந்தபடியே சிவகாசி பட்டாசு ஆலைக்குச் சென்று வேலை பார்த்து வந்தார். பின்னாளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து தன் மாமனாருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் வைத்து ரகசியமாக பேன்சி பட்டாசுகளைத் தயார் செய்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.

சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிக்க, வெடி பொருட்களை சேமித்து வைக்க, விற்பதற்கு, வாங்குவதற்கு அவைகளுக்கான அனுமதியும் பெறவில்லை என்கிறார்கள் கிராமத்தினர்.

இந்த நிலையில், நேற்று காலை நேரம் அந்த வீட்டில் சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அது சமயம் எதிர்பாராத வகையில் திடீரென தயாரிப்பு மருந்து கலவைகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து கலவையும் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளும் மொத்தமாய் வெடித்துச் சிதறின. இதில் அந்த வீடு அடியோடு இடிந்து தரைமட்டமானது. தயாரிப்பிலிருந்த சத்திஸ்வரன் உடல் வேறு கைகள் வேறாய் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். அது போக இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகளும் அதிர்ந்து விரிசல் கண்டுள்ளன. அதுசமயம் வீட்டினருகே நின்று கொண்டிருந்த அவரது மனைவி ராமலட்சுமியும் படுகாயமடைந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார், ஆட்சியர் கமல்கிஷோர், கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.