விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவியரசி (31), இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கவியரசி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவரும் இவரது கணவரும் நேற்று காலை 11 மணி அளவில் செஞ்சியில் உள்ள கவியரசியின் தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தங்கள் 2 வயது ஆண் குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றனர். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் அட்டையை கவியரசி கணவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
உடனே அவரது கணவர் முத்துக்குமார் மனைவியையும் இரண்டு வயது குழந்தையையும் தண்டிய மடைப் பகுதி சாலையோரம் மரநிழலில் நிற்க வைத்துவிட்டு தனது வீட்டிற்குத் தடுப்பூசி அட்டையை எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்தச் சாலை வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இரும்பு ராடை காட்டி மிரட்டி கவியரசி அணிந்திருந்த நகைகளைக் கழட்டி கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.
கவியரசியும் நகையைக் கழற்றித்தர மறுக்க ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் தன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் கவியரசியின் தலையில் தாக்கியுள்ளனர். அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். சற்று நேரத்தில் கர்ப்பிணிக்கான தடுப்பூசி போடும் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு முத்துக்குமார் அந்த இடத்திற்குத் திரும்பி வந்துள்ளார். மனைவி தாக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையில் காயம்பட்டு கிடந்த கவியரசி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கணவர் முத்துக்குமாரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கொண்டு டூவீலரில் வந்த கொள்ளையர்களைப் பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.