Skip to main content

கொள்ளிட ஆற்று வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள்-  கடலூர்  ஆட்சியர், அதிகாரிகள் படகில் சென்று ஆய்வு

Published on 16/08/2018 | Edited on 27/08/2018

 

ச்

கொள்ளிட ஆற்று வெள்ளத்தால் சிதம்பரம் அருகே தீவாக மாறிய கிராமங்களை படகு மூலம் சென்று ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 

ச்

 

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால்  மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும்  அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கடைமடை பகுதியான கொள்ளிட கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து உள்ளது. சிதம்பரம்  அருகே  அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுகாட்டூர்,கீழகுண்டலபாடி கொள்ளிட்டக்கரை கிராமங்கள் தீவு போல் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் படகு மூலம் கடந்த 4 நாட்களாக வந்து செல்கிறார்கள். சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் அப்பகுதியில் முகாமிட்டு வருவாய் துறையினர் மூலம் படகு உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளார். இந்நிலையில் வியாழன் காலை  மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குநர் ஆனந்தராஜ், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன்  அரசு அதிகாரிகளுடன் படகு மூலம் கிராமத்திற்கு  சென்று  முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

ச்

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பகுதியில்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் வரவுள்ளது என்று தகவல் வந்துள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போய்விடும் என்று அச்சப்பட தேவையில்லை. பகல்,இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள இளைஞர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆற்றுக்கு அடுத்த கிராமமான பெராம்பட்டு மற்றும் இதே பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு வழங்கபடும் என்றார். இப்பகுதியில் உள்ள மக்கள் பழைய கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அரசுக்கு அனுப்பிவைத்து பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

போதைப்பொருள் விற்பனை; கடலூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

pondicherry police filed case for four cuddalore youngsters 

 

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த கடலூரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோரின்உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, குற்றப்பிரிவு காவலர்கள் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று (23.03.2023) காலை 07.30 மணியளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது, கிழக்கு பக்கமாக அமைந்துள்ள கழிப்பறை அருகில் பொதுமக்களுக்கும், கஞ்சா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கடலூர் திருப்பாப்புலியூரை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (வயது 23), ராமலிங்கம் என்பவரது மகன் மேகி என்கிற மகேஷ் (வயது 21), வன்னியர்பாளையம் சிவசுப்பிரமணியம் மகன் ரேவந்த் (வயது 25), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி மகன் ஆதித்தியன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1400 கிராம் கஞ்சா அடங்கிய 140 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாமலகோட்டையை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கஞ்சா இலைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.