
நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோயில் விதிகளை மீறி மாடவீதிகளில் காலணியுடன் நடந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து மணம் முடித்துள்ள நடிகை நயன்தாரா, தனது கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். ஏழுமலையான் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி பின்னர் மாடவீதிகளில் நடந்து சென்றனர்.
அப்போது, கோயில் விதிகளை மீறி காலணி அணிந்த படியே மாடவீதிகளில் நயன்தாரா நடந்து சென்றார். அப்போது, திருமணத்துக்கு பிந்தைய வெட்டிங் சூட் எனப்படும் படப்பிடிப்பையும் நடத்தினார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும், விதிகளை மீறி காலணியுடன் நடந்து சென்றது குறித்தும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனை படி, நடிகை நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அறியாமல் தவறு செய்துவிட்டதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார்.