வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் அரசு சார்பில் கட்டப்பட்ட பல கட்டிடங்களை திறண்டு வைக்க மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேரம் ஒதுக்காததால் திறக்கப்படாமலே உள்ளன. இதுப்பற்றி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகளும் அமைதியாகவே உள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் 3 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது மேல்நிலைப்பள்ளி கட்டிடம். இந்த கட்டிடம் கட்டி முடிந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் திறக்கப்படாமலே இருந்துவந்தது.
ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த பாலசுப்பிரமணி, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தினகரன் பின்னால் சென்றார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தொகுதி காலியாகவுள்ளது. அதனால் இந்த தொகுதி மீது யாரும் அக்கறை கொள்ளவில்லை. மின்னூர் என்பது ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்டது. இதனால் அந்த ஊரில் புதியதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க ஆளும்கட்சியான அதிமுகவினர், அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதுப்பற்றி அந்த ஊரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கல்வி குழு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை, திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கவில்லை. இதனால் மாணவ – மாணவிகள் பாழடைந்த பள்ளி கட்டிடத்தில் படித்து வரும் நிலை ஏற்பட்டது.
இதனால் கோபமான பொதுமக்கள் ஆட்சியாளர்களை, அதிகாரிகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. நாமே திறந்துவைத்துவிடுவோம் என முடிவு செய்து மக்களே பணத்தை திரட்டி பள்ளியை அலங்காரம் செய்தனர். இந்த தகவல் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிந்து அதிர்ந்துவிட்டனர். உடனே கலெக்டர் ராமன் கவனத்துக்கு தகவலை கொண்டு சென்றனர். இப்போது போய் தடுத்தால், நீங்களும் திறக்கவில்லை. எங்களையும் திறக்க விடமாட்டேன்கிறிங்க நியாயமான்னு மக்கள் ஆத்திரப்படுவார்கள். இதனால் வேறு பிரச்சனைகள் வரும். அதனால் அமைதியாக இருந்துவிடுவோம் என முடிவு எடுக்க அதன்படி அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.
இன்று பிப்ரவரி 22ந்தேதி அந்த ஊர் மக்கள் பள்ளி முன் ஒன்று திரண்டு அந்த ஊரை சேர்ந்த வயது முதிர்ந்தவர் ஒருவரை கொண்டு பள்ளியை திறந்து வைத்துவிட்டனர்.