Skip to main content

உத்தரப் பிரதேச சம்பவம்: மஜக சார்பில் இரங்கல் மற்றும் கண்டன கூட்டம்! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Uttar Pradesh incident; Condolences  on behalf of MJK

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Uttar Pradesh incident; Condolences  on behalf of MJK

 

அந்தவகையில், தஞ்சை ரயிலடியில் மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் இரங்கல் மற்றும் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டவர்கள் தங்களது கைப்பேசி விளக்குகளை எரியவிட்டு, ஐந்து நிமிடம் மௌனம் கடைப்பிடித்து தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். மேலும், அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, விவசாய சங்கப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். மேலும், மஜக கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சிறை நிரப்பும் போராட்டம்; மஜக அறிவிப்பு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Jail Filling Struggle; MJK

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் இன்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது.

 

இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக ஆயுள் சிறைவாசிகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளை கடந்து வாடும் ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இக்கோரிக்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு 'சிறை நிரப்பும் போராட்டம்' நடத்துவது என்றும், இதில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க செய்வது  என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எதிர்வரும் ஜூலை 9 அன்று நெல்லை - பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து மதுரை மத்திய சிறை முன்பு 18.08.2023 அன்றும், சேலம் மத்திய சிறை முன்பு 07.09.2023 அன்றும், கடலூர் மத்திய சிறை முன்பு 07.10.2023 அன்றும் இப்போராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை - புழல், கோவை, திருச்சி, வேலூர், ஆகிய சிறைச்சாலைகள் முன்பு அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போராட்டங்கள் மாபெரும் சட்டப் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

 

இதில் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.