Undressing and celebrating birthday ... Public demand to take action!

அண்மைக்காலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது பட்டாக்கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுப்பது, கேக் வெட்டுவது, அதனை சமூக வலைதளங்களில் பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரில் நடந்த ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாடும் மாணவனை ஆடைகளைக் கழற்றி ஊர்வலமாக அழைத்து வந்து பிறந்தநாள் கேக் வெட்ட வைத்த அருவருக்கத் தக்க நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலர் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை சக நண்பர்கள் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக அழைத்து வந்து பைக் சீட்டில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட வைத்துள்ளனர். இதைத் தட்டி கேட்ட அப்பகுதி மக்களையும் அந்த மாணவர்கள் அச்சுறுத்தும் விதமாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியது. பொதுவெளியில் நடைபெற்ற இப்படியொரு அநாகரிகமான செயலுக்கு இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதுபோன்ற செயல்களை வருங்காலத்தில் தடுக்க, போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment