Skip to main content

வெகு நேரமாகியும் வெளியே வராத இருவர்... சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

The two who did not come out for a long time

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த். இவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவரது மகள் எட்டு வயது சஞ்சனா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அருகிலுள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவரது மகன் குமரேசன்(8) இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். குமரேசன், சஞ்சனா இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வரும் நண்பர்கள்.

 

இவர்களுடன் மேலும் இரு நண்பர்கள் உட்பட 4 பேர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் 2 பேர் கிணற்றிலிருந்து வெளியே வந்துவிட்டனர். குமரேசன், சஞ்சனா ஆகிய இருவரும் வெகு நேரமாகியும் கிணற்றிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் முதலில் வெளியே வந்த இரண்டு சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்று கிணற்றில் இறங்கி சிறுவர்களைத் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை இதையடுத்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத் தேடலுக்குப் பிறகு சஞ்சனாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் குமரேசன் உடலைக் கிணற்றிலிருந்து சடலமாகத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்களின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.