Skip to main content

தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

two wheeler police arrested in chidambaram

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில் வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது.

 

இதுகுறித்து அவர்கள் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் துரை, ரவி மற்றும் காவலர்கள் தனித்தனியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே சீர்காழியைச் சேர்ந்த இலக்கியன் (24) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக கூறினார். துருவி துருவி விசாரணை செய்ததில் வாகனத்தை வல்லம்படுகை சரவணன் வீட்டு முன்பாக திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

 

அதேபோன்று அம்மாபேட்டை அருகில் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி தணிக்கை செய்த போது அதில் வந்த இரண்டு நபர்கள் ஆவணங்களை காட்டாமல் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை செய்ததில் வாகனத்தை ஓட்டியவர் பூம்புகாரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) என்பதும், பின்னால் அமர்ந்து வந்தவர் மயிலாடுதுறை திருவெண்காடுவைச் சேர்ந்த பிரபு (வயது 28) என்பதும் தெரிய வந்தது. இருவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிதம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 TDF Vasan in Puzhal Jail

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கிச் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டுப் போடப்பட்டது.

 

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக் குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் அடைக்கப்பட்டுள்ளார்.   

 

 

Next Story

போலீசிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

trichy manapparai nearest two wheeler  youngster admitted hospital

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சேதுரத்தினபுரம், பொத்தமேட்டுப்பட்டி மற்றும் மணப்பாறை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத் திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொத்தமேட்டுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது மணல்மேல்குடியைச் சேர்ந்த மாதவன் (வயது 26), தாராபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 22) ஆகிய இருவரையும் பொதுமக்கள் பிடித்து மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதையடுத்து போலீசார் கைது செய்தவர்களில் ஒருவரான ஆகாஷ் என்பவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் அங்கிருந்து போலீசாருக்கு போக்கு காட்டி விட்டுக் கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்று குமரபட்டியில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான மாதவன் வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஆகாஷ் மற்றும் மாதவனுக்கும் உதவியாக இருந்த குளித்தலையைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்பவரையும் கைது செய்தனர்.

 

இந்நிலையில் ஆகாஷை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் தனியார் கல்லூரி அருகே கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். எடுத்துச் சென்ற இருசக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு அழைத்து வரும் பொழுது, கலிங்கப்பட்டி பாலம் அருகே தான் திருடிய வாகனம் இருப்பதாகக் கூறியதால் வாகனத்தை விட்டு இறங்கி, காவலர்கள் ராமு மற்றும் தாசையாவை கீழே தள்ளிவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது ஆகாஷின் வலது கால் உடைந்தது. இதையடுத்து ஆகாஷ் மற்றும் ஆகாஷ் தள்ளிவிட்டதில் காயமடைந்த ராமு, தாசையா ஆகிய மூவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை போலீசார் இவ்வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற திருடன் கால் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.