Skip to main content

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் வழிப்பறி! சிக்கிய திருடனுக்கு தர்மஅடி!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

 pernampattu

 

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவரும் இவரது மனைவி பிருந்தாவும், செப்டம்பர் 29 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுவிட்டு, மதியம் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர்.

 

அப்போது ஆம்பூர் அருகே மின்னூர் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் குடிபோதையில் இருந்த மூவர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பிருந்தாவின் கழுத்தில் இருந்த 1 -1/2 சவரன் தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

 

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட தம்பிதியினர், திருடன் என சத்தம் போட்டு கத்தியுள்ளனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் விபரத்தை அறிந்து தப்பியோடியவர்களை பிடிக்க துரத்தினர். செயின் பறித்துக்கொண்டு தப்பிய ஓடிய மூவரில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவனைப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

 

இதுபற்றிய தகவல், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்குச் சென்றது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலிஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் மின்னூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. மற்ற இருவர் குறித்தும், இவர்கள் இப்படி எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளார்கள், வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களா என விசாரணை நடத்திவருகின்றனர். 

 

பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலயில் இருசக்கர வாகனத்தை மறித்து கழுத்தில் இருந்த தங்கத் தாலியைப் பறித்ததும், அவர்களைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து அடித்ததும் தீயாய்ப் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைகள் கொள்ளைச் சம்பவம்; நூதன முறையில் வலம் வந்த கொள்ளையன் கைது

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
coimbatore Jewelery issue police action

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், சுமார் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஐயப்ப பக்தர் போல் வேடம் அணிந்து வலம் வந்த நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜயகுமார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.

Next Story

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளருக்கு போலீஸ் காவல்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pranav Jewelery owner police custody

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜுவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால் முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடியும் வந்தனர். இந்த சூழலில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான மதன் செல்வராஜ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து இவரை டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த மனு கடந்த 8 ஆம் தேதி (08.12.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இது குறித்து 1,900க்கும் மேற்பட்டோர் புகார்கள் கொடுத்துள்ளனர். மதன் செல்வராஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவி கார்த்திகா தலைமறைவாக உள்ளார்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், கார்த்திகா ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.