Skip to main content

25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன இரண்டு கிலோ 'புலாசா மீன்'

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

 Two kilos of 'Pulasa fish' auctioned for 23 thousand rupees

 

ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் புலாசா மீன் 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றுப்படுகை உள்ளது. கடலும் ஆறும் சங்கமிக்கும் அந்த இடத்தில் அரியவகை மீனான 'புலாசா' எனும் மீன் அரிதிலும் அரிதாக பிடிபடும். மீன்களின் ராஜா என்றழைக்கப்படும் புலாசா மீன் கிடைத்தால் மீனவர்களுக்கு அன்றைக்கு பம்பர் பரிசுதான். அதிக சுவையும் சத்துக்களும் கொண்ட இந்த புலாசா மீனை ஆந்திர மக்கள் விரும்பி உண்ணும் நிலையில், எந்தவிலை கொடுத்தேனும் இந்த மீனை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இந்த மீனுக்காக போட்டிபோடுவார்கள். இதை பலர் வாங்கி அன்பானவர்களுக்கு பரிசாகக்  கூட வழங்குவார்கள்.

 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு புலாசா மீன்கள் பிடிபட்டது. இரண்டு கிலோ எடை கொண்ட ஒரு புலாசா மீன் 25 ஆயிரம் ரூபாய்க்கும், மற்றொரு மீன் 23 ஆயிரத்திற்கும் என மொத்தம் 48 ஆயிரத்திற்கு ஏலம் போனது. ஏனாம் பகுதியை சேர்ந்த கொல்லு  நாகலட்சுமி என்பவர் இந்த இரண்டு மீன்களையும் ஏலம் எடுத்துள்ளார். இந்த வகை மீன்கள் பெரும்பாலும் பிடிக்கப்படும் ஆற்றின் கரையிலேயே விற்பனை செய்யப்படும். பிரான்ஸ் நாட்டு மக்களும் இந்த ரக மீன்களை விரும்பி உண்பதாக சொல்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.