Skip to main content

ஈமச்சடங்கிற்கு சென்ற இடத்தில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Two children passed away

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது சித்தணி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமார் (30), இவரது மனைவி சங்கீதா (25). இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது தினேஷ்குமார், நான்கு வயது சத்யஸ்ரீ ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சங்கீதாவின் தாயார் பெரியநாயகி சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று (30.06.2021) சங்கீதா பிறந்த ஊரான ஆசூரில் அவருக்கான 16ஆம் நாள் ஈமச்சடங்கு காரியத்தில் கலந்துகொள்வதற்காக குமார் - சங்கீதா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் அங்கு சென்றிருந்தனர்.

 

நேற்று அந்த ஈமச்சடங்கு காரியத்தில் குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததால் குமார் - சங்கீதா தம்பதி ஈமச்சடங்கு பணியில் முழு கவனத்துடன் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் தினேஷ், சத்யஸ்ரீ இரு பிள்ளைகளும் காரியத்திற்கு வருகை தந்திருந்த உறவினர் பிள்ளைகளுடன் சேர்ந்து அதே ஊரில் உள்ள ராமசாமி என்பவர் வயலில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். குழந்தைகள் அனைவரும் கிணற்றில் இறங்கி குளிக்கும்போது தினேஷ், சத்யஸ்ரீ இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தனர். இதைக்கண்டு மற்ற குழந்தைகள் கத்தி சத்தம் போட்டுள்ளனர்.

 

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஓடிச்சென்று கிணற்று தண்ணீரில் மூழ்கிய இரு குழந்தைகளையும் தேடி வெளியே கொண்டுவந்தனர். மயக்க நிலையில் இருந்த தினேஷ், சத்யஸ்ரீ இரு குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். ஈமச்சடங்கு காரியத்திற்கு வந்த இடத்தில் இரு குழந்தைகள் இறந்த சம்பவம் ஆசூர் கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.