Skip to main content

சத்தியமா இது குடிதண்ணீர் தான்;கண்டு கொள்ளாத அதிகாரிகள், அமைச்சரிடம் முறையிட்ட தம்பதி!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
water

 

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி கிராமத்தில் உள்ள குடிதண்ணீர் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் குடிதண்ணீர் செம்மண் கலந்த மழைத் தண்ணீர் போல இருப்பதால் ஒரு வருடமாக ஒவ்வொரு அதிகாரியாக பார்த்து முறையிட்ட தம்பதி இன்று ஒன்றிய அதிகாரிகளிடம் நினைவூட்டல் மனு கொடுக்க கலங்கிய தண்ணீருடன் வந்தால் அதிகாரிகள் இல்லை. அதனால்  அந்த தம்பதி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து கடைசியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இது குறித்து செம்பட்டிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதை ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி ஆகியோர்..  அமைச்சரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்து.. 

 

எங்கள் கிராமம் கல்பூமி. அதனால் குடிநீருக்குச் சிரமப்பட்டு வருகிறோம். ஊராட்சியின் சார்பில் அதற்காக ஆழ்குழாய்க்கிணறு அமைத்து அதிலிருந்து 60 - ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

கடந்த ஓராண்டாக செம்மண் கலரில் சாக்கடை நீரைப்போல் கலங்கலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. அதை மாற்றி சுத்தப்படுத்தி மாற்று ஏற்பாடு செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும். எந்த அதிகாரியும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. 

 

இப்போதும் காலையில் இருந்து ஊராட்சி செயலரிடம் மனு கொடுக்க சென்றால் அவர் அங்கு இல்லை. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலரைத் தேடிச் சென்றால் அவர்களும் இல்லை. 

 

அப்பதான் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டையில் வேறொரு நிகழ்ச்சிக்காக வந்திருப்பது தெரிந்து அங்கே போய் புகார் மனுவைக் கொடுத்து பாட்டிலில் நாங்கள் கொண்டு வந்த அந்தத் தண்ணீரையும் காட்டினோம். அந்த தண்ணீரைப்  பார்த்தவர்கள் எல்லாம் இந்த நீரையா குடிக்கப் பயன் படுத்துகிறீர்கள் என்று வியப்புடன் பார்க்கிறார்கள். அதனை வடிகட்டி காய்ச்சி அப்புறம்தான் குடிக்க வேண்டியிருக்கிறது. 

 

 

ஆனால் அந்தத் தண்ணீரால் தான் இந்த மக்களுக்கு நோய் வருகிறது என்ற காரணத்தை மருத்துவர்கள் பலரும் சொல்லி பயமுறுத்துவதால் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் தண்ணீரோடு வந்தோம் என்றனர். தொடர்ந்து மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததோடு ஊராட்சிகள் திட்ட இயக்குனர் முருகனை போனில் தொடர்பு கொண்டு இந்த ஆழ்குழாயில் பைப் இறக்கியிருக்க மாட்டார்கள் போல் தெரிகிறது. அதனால் அதற்கு என்ன மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டும், அல்லது வேறு ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

 

அதன் பிறகு.. அதிகாரிகளை சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விரைவில் நல்லதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதரா அமைச்சர் மாவட்டத்தில் சுகாதராமில்லாத தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நல்ல குடிதண்ணீர் எப்போது கிடைக்கும்?

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.