Skip to main content

ஆன்லைன் லாட்டரியால் நேர்ந்த சோகம்! வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நூல் வியாபாரி! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

அரசும், அரசுத் துறை நிர்வாகமும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினாலும் சட்டத்திற்கு புறம்பான சில செயல்பாடுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் சூதாட்டமும், லாட்டரி விற்பனையும்.

 

ஈரோட்டை சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரியால் லட்சக்கணக்கில் பணம் இழந்ததாக வீடியோவில் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஒராண்டுக்கு முன்பே ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சசிமோகன் வந்த பிறகு லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். பல ஊர்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 215 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இப்படி எஸ்.பி. மிகவும் கறாராக இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில இடங்களில் மறைமுகமாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

 

இந்நிலையில் தான்  ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி ஆன்லைன் லாட்டரி சீட்டில் ரூபாய் 62 லட்சத்தை இழந்து விட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வேதனையால்  வீடியோ பதிவிட்டு  வாட்ஸ்-அப்பில் பரப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் 54 வயது  ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகளின் கணவர் இறந்ததால், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் குமாரபாளையத்தில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார்.  


ராதாகிருஷ்ணன் முதலில் சொந்தமாக தறிப்பட்டறை நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் 13ந் தேதி மாலை "நான் ஆன்லைன் லாட்டரி சீட்டை நம்பி ரூ. 62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமையாகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று வீடியோவில் பதிவிட்டுவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் 62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இப்போது முதல் கட்ட விசாரனை நடை பெற்று வருகிறது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பதை புலன் விசாரணை செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் எவ்வித சட்டவிரோத செயல்களுக்கும் இடமில்லை. மிக கடுமையான நடவடிக்கையும் தொடர் கண்காணிப்பையும் செய்து வருகிறோம். அரசு உத்தரவுப்படி குற்றச் செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியாக கூறினார் மாவட்ட எஸ்.பி. சசிமோகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.