Skip to main content

ஆன்லைன் லாட்டரியால் நேர்ந்த சோகம்! வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நூல் வியாபாரி! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

அரசும், அரசுத் துறை நிர்வாகமும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினாலும் சட்டத்திற்கு புறம்பான சில செயல்பாடுகள் தொடர்ந்து ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் சூதாட்டமும், லாட்டரி விற்பனையும்.

 

ஈரோட்டை சேர்ந்த நூல் வியாபாரி ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரியால் லட்சக்கணக்கில் பணம் இழந்ததாக வீடியோவில் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஒராண்டுக்கு முன்பே ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சசிமோகன் வந்த பிறகு லாட்டரி சீட்டை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். பல ஊர்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 215 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

 

இப்படி எஸ்.பி. மிகவும் கறாராக இது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில இடங்களில் மறைமுகமாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த லாட்டரி விற்பனையை தடுக்க, ரகசிய தகவலை சேகரிக்க, வாட்ஸ்அப் குழுக்களை ஊடுருவி தகவலை சேகரிக்க தனியாக காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

 

இந்நிலையில் தான்  ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி ஆன்லைன் லாட்டரி சீட்டில் ரூபாய் 62 லட்சத்தை இழந்து விட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வேதனையால்  வீடியோ பதிவிட்டு  வாட்ஸ்-அப்பில் பரப்பிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் 54 வயது  ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகளின் கணவர் இறந்ததால், தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் குமாரபாளையத்தில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார்.  


ராதாகிருஷ்ணன் முதலில் சொந்தமாக தறிப்பட்டறை நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராதாகிருஷ்ணன் 13ந் தேதி மாலை "நான் ஆன்லைன் லாட்டரி சீட்டை நம்பி ரூ. 62 லட்சம் வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிருடன் இருந்தால் அதற்கு மேலும் அடிமையாகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று வீடியோவில் பதிவிட்டுவிட்டு ராதாகிருஷ்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

 

The tragedy of the online lottery! The thread dealer who posted the video and passed away

 

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன் 62 லட்சத்தை எந்த காலகட்டத்தில் எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இப்போது முதல் கட்ட விசாரனை நடை பெற்று வருகிறது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? தற்கொலைக்கு தூண்டிய நபர் யார் என்பதை புலன் விசாரணை செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் எவ்வித சட்டவிரோத செயல்களுக்கும் இடமில்லை. மிக கடுமையான நடவடிக்கையும் தொடர் கண்காணிப்பையும் செய்து வருகிறோம். அரசு உத்தரவுப்படி குற்றச் செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியாக கூறினார் மாவட்ட எஸ்.பி. சசிமோகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.