Skip to main content

"நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interim budget 2021

 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். 

 

அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழகத்தின் கடன் ரூபாய் 5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கு இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 1,738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 

 

12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூபாய் 41,417.30 கோடியாக இருக்கும். ஒப்புதல் தரப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற 2021 - 2022 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும். மூலதனச் செலவினம் 14.41% ஆக உயர்ந்து ரூபாய் 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூபாய் 7,217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும் ஏற்படாமலிருக்க பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - தேதியை அறிவித்த சபாநாயகர்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
nn

தமிழக ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  வருகின்ற பிப்.19 ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து 29 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், வருகின்ற 21ம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார்கள்.

ஆளுநர் உரையை தயாரிப்பது அரசின் வேலை. அரசு அந்த பணியை சரியாக செய்யும். போன வருடம் ஆளுநர் உரையின் போது ஏற்பட்ட சர்ச்சை நம்மால் ஏற்பட்டது அல்ல. சட்டமன்ற பேரவை தலைவராலோ அல்லது அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த வருடம் நன்றாக இருக்கும்'' என்றார்.

அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ''சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பான முழு உரிமையும் சட்டப்பேரவை தலைவருக்கு தான் உண்டு என நானும் சொல்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த சபாநாயகர் தனபாலும் அதை சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்'' என்றார்.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.