Skip to main content

மனமுடைந்த ஒரு தந்தையின் ட்விட்டர் பதிவும், தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையும்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Thiruvallur district A Father of Mental illness boy has been caught by police

 

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக வரும் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் முதலில் காலை 12 மணி வரை திறக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சென்னை காவல் ஆணையர் ஊரடங்கில் இருக்கும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த ஊரடங்கின் போது பொதுமக்கள் அதிக அளவில் வெளியே சுற்றி திரிவதால் ஊரடங்கின் பயன் அடைய முடியாத நிலை ஏற்படுமோ எனும் அச்சம் ஏற்பட்டது. 

 

இதனால், ஊரடங்கில் இன்னும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து ஊரடங்கை கடுமையாக்கியுள்ளது தமிழக அரசு. அதன்படி இன்று (15ஆம் தேதி) முதல், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 17ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை உள்ளிட்டவை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் சென்னை உட்பட தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், நேற்று காலை திருவள்ளூர் மாவட்டத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றவரை காவல்துறையினர் மடக்கி அவரிடம் ஊரடங்கு விதியை மீறியதாக அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர். இதனால், மனமுடைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசை குறிப்பிட்டு, எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளில் குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்” என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

 

 

இது தமிழக முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் அவரை தொடர்புகொண்டு நடந்தவற்றை விசாரித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரத்திற்குள் அவரின் வீடு தேடி வந்து மருந்தையும் தாங்கள் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டு சென்றனர். 

 

முதல்வரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இன்று காலை காவல்துறை மீது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். என் குறைகளை கேட்டறிந்தது பேராறுதலாக இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேரன்போடு என்னை அணுகினர். நான்குமணி நேரத்தில் என் மகனின் மருந்தையும் பணத்தையும் வீடு தேடிவந்து கொடுத்துதவிய காவல்துறைக்கும் அரசுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு வகையில் நாகரிக அரசியல் நடந்துவருவதாக அரசியல் விமர்சகர்களும் மக்களும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் மீண்டும் திமுக ஆட்சி பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.