Skip to main content

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
Thirumavalavan



சமூகநீதியைக் காப்பாற்றவும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் கலிபூங்குன்றன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து முன்னதாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இந்திய சமூகத்தில் அனைத்து வகையிலும் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த பிராமணர், ராஜ்புத், ஜாட், பூமிகார், மராத்தா போன்ற சமூகப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கென பாஜக அரசு, பத்து சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறது. 

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. அதிமுக, திமுக, சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இதனை வெளிப்படையாக எதிர்த்துள்ளன. பிற எதிர்கட்சிகள் யாவும் இதை நேரடியாக எதிர்க்க இயலாமல், அரசியல் நெருக்கடியால் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் இங்கே அரங்கேறியுள்ளது. 


 

Thirumavalavan



பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யாவரும் பயன்பெற வேண்டும் என்கிற வகையில்தான்,  இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கான ஒரு திட்டமல்ல. சமூக அடிப்படையில் நீண்டகாலமாக இழிவுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வரும் பல்வேறு சமூகப்பிரிவினர் யாவரும் அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வைப் பெறுவதற்கும், சமூக இழிவுகள், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்கேற்ற அதிகார வலிமையைப் பெறுவதற்கும் ஏதுவான வகையில் வரையறுக்கப்பட்ட ஒரு புரட்சிகர கோட்பாடு தான் சமூக நீதியாகும்.
 

எவர் ஒருவரும்  பொருளாதாரத்தில் உழைப்பின் மூலமாக மேம்பட்டுவிட முடியும். ஆனால், ஒருவரின் சமூகத் தகுதியை இவ்வாறு மேம்படுத்த இயலாது. கல்வியின் மூலமாகப் பெறும் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் வெடித்தெழும் போராட்டங்களுக்குப் பின்னரே ஒட்டுமொத்த சமூகத்தின் சாதியமைப்பில் படிப்படியான மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த புரிதலின் அடிப்படையில் தான் சமூகநீதி கோட்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, சாதியின் பெயரால் பாதிக்கப்படுவோருக்கு இடஒதுக்கீடு என்னும் செயல் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
 

இத்தகைய சமூகநீதி கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று நீண்டகாலமாகப் போராடி வரும் சதிக்கும்பல், மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூகநீதி கோட்பாட்டை அழித்தொழிப்பதே ஆகும். அதாவது, தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப்படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சியாகும். 


 

Thirumavalavan



ஏற்கனவே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ‘க்ரிமி லேயர்’ என்னும் பொருளாதார அளவுகோலை திணித்தவர்கள் தற்போது அதற்கும் ஒருபடி மேலாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்தையே கொண்டு வந்துவிட்டனர். இனி வருங்காலத்தில் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்த இது வழிவகுக்கும். 
 

எனவே, சாதியை ஒழிப்பதற்கான சமூகநீதி கோட்பாட்டைக் காப்பாற்றுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 
 

இந்நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றவும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையைத் திணிக்கும் சதிமுயற்சியை முறியடிக்கவும் ஏதுவாக, சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 11.1.2019 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியிருந்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.