Skip to main content

இருப்பது இரண்டு வாரங்கள்... தேவையோ ரூ. 4 கோடி... குழந்தையின் உயிர்காக்க பெற்றோரின் பாசப்போராட்டம்...

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

thanjavur couple raising funds to save save their daughter bharathi from Spinal muscular atrophy

 

முதுகு தண்டுவட தசை நார் சிதைவு (SMA) நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது 23 மாத பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். 

 

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி ஆகியோரின் மகள் பாரதி. பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத இப்பச்சிளம் குழந்தையின் உயிரை மெல்லக் குடித்து வருகிறது SMA எனும் கொடிய நோய். 

 

பேசுவது, நடப்பது, மூச்சு விடுவது மற்றும் விழுங்குதல் போன்ற அடிப்படை மனித இயக்கங்களை, மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அமைந்திருக்கும்  நரம்பு செல்களே கட்டுப்படுத்துகின்றன. இந்த நரம்பு செல்களின் செயல்பாடுகளைப் பாதித்து மனிதனின் அடிப்படை இயக்கங்களையே மேற்கொள்ள முடியாமல் செய்து, உயிரிழப்பு வரை கொண்டுவிட்டுவிடக் கூடியது இந்த நோய். 

 

இப்படிப்பட்ட இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குழந்தையைக் காப்பாற்ற பண உதவிக்காகப் பொதுமக்களை நாடியுள்ளனர் ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். பிறந்தபோது ஆரோக்கியமாகக் காணப்பட்ட இவர்களது குழந்தை பாரதி, இரண்டு வயதை நெருங்கும்போது தானாக எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே இந்நோயின் பிடியிலிருந்து சிறுமியைக் காக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஒற்றை மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என அறிந்து, அதிர்ச்சியடைந்த குழந்தை பாரதியின் பெற்றோர், சிகிச்சைக்குத் தேவையான போதிய பணத்தைத் திரட்ட முடியாமல் கடைசி நம்பிக்கையாகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

 

06.11.2021 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டிய குழந்தை பாரதிக்கு, அதற்குள்ளாக அந்த ஊசியைச் செலுத்த வேண்டும் என்றார் நம்முடன் பேசிய குழந்தையின் தாய் எழிலரசி. மேலும், "சிறுதுளி பெருவெள்ளம் என்ற உதவியவர்களால் இதுவரை (20.10.2021) 12 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 4 கோடியை அடைய நீங்களும் உங்களின் நண்பர்களும் சிறு உதவி செய்தால் கூட ( 4 லட்சம் பேர் x 100 ரூபாய்) அவளின் இரண்டாவது பிறந்தநாள் 06.11.2021க்குள் இந்த ஊசியைச் செலுத்தி அவளின் உயிரைக் காப்பாற்றி விடலாம்" எனக் கூறி மக்கள் மீதான நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் ஜெகதீஷ் மற்றும் எழிலரசி.

 

பெற்றோரின் தொடர்பு எண்கள்...
ஜெகதீஷ் - 9791793435
எழிலரசி - 9597584987

நேரடியாக பண உதவி செய்ய வங்கி கணக்கு விவரம்..
R. Jagadeesh
Account No. 1147155000168550
IFSC. KVBL0001147
Bank. Karur vysya bank

G pay, phone pe & paytm 9791793435

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.