
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய பிளாஸ்டிக் சேமிக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கும் பரவி எரிந்து வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மதன்குமார் என்பவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்து வந்துள்ளார். இன்று காலை அந்த பிளாஸ்டிக் கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீயானது அருகில் உள்ள நகராட்சியின் குப்பை கிடங்கிற்கும் பரவியது. இதனால் அந்த குதியில் கரும்புகை சூழ்ந்தது.

தீ மளமளவென பற்றி எரிந்ததால் வானுயர எழுந்த கரும்புகை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகேயே தேங்காய் பஞ்சு தொழிற்சாலையும், பெட்ரோல் பங்கும் இருப்பதால் இந்த தீ விபத்து அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. ஒரு மணிநேரத்திற்குப் பிறகு வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.